என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கிருஷ்ணகிரியில் பிரமாண்ட விழா: ரூ.2,885 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
- கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள விழா மேடைக்கு முதலமைச்சர் வந்தார்.
- பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
கிருஷ்ணகிரி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆய்வு பயணத்தின் போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதுடன், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கிருஷ்ணகிரி வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலமாக காலை ஓசூர் தனேஜா விமான ஓடு தளத்தை வந்தடைந்து அங்கிருந்து கார் மூலமாக கிருஷ்ணகிரிக்கு வந்தார்.
அங்கு சுங்கச்சாவடி அருகில் தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராயக்கோட்டை மேம்பாலம் முதல் அண்ணா சிலை, பெங்களூரு சாலை, 5 ரோடு, சென்னை பை-பாஸ் சாலை வரையில் முதலமைச்சரின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்தது. அப்போது பொதுமக்களிடம் இருந்து மனுக்களை அவர் பெற்று கொண்டார்.
இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள விழா மேடைக்கு முதலமைச்சர் வந்தார். அங்கு காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து விழா மேடை அருகில் அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அங்கு நடைபெற்ற அரசு விழாவில் கலெக்டர் தினேஷ்குமார் வரவேற்று பேசினார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2,885 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
விழாவில் மாவட்டத்தின் திட்டப்பணிகள் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பேசினார்.






