என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கிறிஸ்துமஸ்-புத்தாண்டு விடுமுறை: சென்னை-மதுரை, தூத்துக்குடி விமான டிக்கெட் விற்று தீர்ந்தன
- சென்னை-மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,248 பெங்களூரு வழியாக சுற்றி செல்வதால்,ரூ.13,160.
- சென்னை-கோவை வழக்கமான கட்டணம் ரூ.4,147. ஆனால் இன்றும், நாளையும் கூடுதல் கட்டணமாக ரூ.8,448 உள்ளது.
ஆலந்தூர்:
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது.
சென்னையில் இருந்து குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணம் செய்ய ஏராளமானோர் வருகிறார்கள். இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் விமானங்களில், இன்றும் நாளையும் அனைத்து டிக்கெட்களும் காலியாகி விட்டன. இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய தென் மாவட்ட மக்கள், சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விமானங்களில் பயணிப்பதால், திருவனந்தபுரம் செல்லும் விமானங்களிலும் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்து உள்ளது. இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரத்திற்கு நேரடி விமானங்கள் இல்லாமல், இணைப்பு விமானங்களில் சென்னையில் இருந்து பெங்களூரு சென்று, பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம், தூத்துக்குடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பயணிகள் கூடுதல் கட்டணங்கள் செலுத்தி டிக்கெட் பெறுவதோடு, பயண நேரமும், கூடுதலாகி பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதேபோல் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களிலும் அனைத்து டிக்கெட்களும் காலியாகிவிட்டதால், பயணிகள் சென்னையில் இருந்து, பெங்களூரு வழியாக, மதுரை, திருச்சி, சேலம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பயணிகள் கூடுதல் கட்டணம், அதிக பயண நேரத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
சென்னை-தூத்துக்குடிக்கு வழக்கமான கட்டணம் ரூ.4,100. ஆனால் பெங்களூரு வழியாக சுற்றி செல்வதால் கட்டணம் ரூ.13,400. சென்னை-திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம், ரூ.5,173. ஆனால் பெங்களூரு வழியாக சுற்றி போவதால், ரூ.17,331 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது.
சென்னை-மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,248 பெங்களூரு வழியாக சுற்றி செல்வதால்,ரூ.13,160.சென்னை-திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.4,121.பெங்களூரு வழியாக சுற்றி செல்வதால், ரூ.13,842 கட்டணமாக உள்ளது. சென்னை-சேலம் வழக்கமான கட்டணம் ரூ.3,093. பெங்களூரு வழியாக சுற்றி செல்வதால் ரூ.8,688 கட்டணம் செலுத்தி செல்கிறார்கள்.
சென்னை-கோவை வழக்கமான கட்டணம் ரூ.4,147. ஆனால் இன்றும், நாளையும் கூடுதல் கட்டணமாக ரூ.8,448 உள்ளது. தமிழ்நாட்டிற்குள் பயணம் செய்வதற்கு போதிய நேரடி விமானங்கள் இல்லாத காரணத்தால், பயணிகள் அண்டை மாநிலங்களான திருவனந்தபுரம், பெங்களூரு வழியாக பயணம் செய்ய வேண்டியது இருப்பதால், கூடுதல் டிக்கெட் கட்டணங்கள் செலுத்துவதோடு, பயண நேரமும் பல மணி நேரம் அதிகமாகி, பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
எனவே விமான நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குள் பயணிகள் பயணிப்பதற்கு தேவையான அளவு கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.






