விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் தான் என்று கூறிய பாஜக எம்.பி. - கனிமொழி கண்டனம்

எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன் தான் அனுராக் தாகூர் கூறினார். நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் தான் என்று கூறிய பாஜக எம்.பி. - கனிமொழி கண்டனம்
Published on

இமாச்சல பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் கலந்து கொண்டார்.

அப்போது அவர் மாணவர்களிடம், விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்? என கேள்வி எழுப்பினார்.

மாணவர்கள் ஒருமித்த குரலில் நீல் ஆம்ஸ்ட்ராங் என பதிலளித்தனர்.

அதற்கு அனுராக் தாக்கூர் "எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன் தான் என்றார். மேலும் அவர் பேசியதாவது:

நாம் இன்றும் நம்மை தற்போதைய நிலையில் பார்க்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழமையான நம் பாரம்பரியம், அறிவு, கலாசாரம் பற்றி நாம் அறியாத வரை, ஆங்கிலேயர்கள் நமக்குக் காட்டியவாறே நாம் இருக்கிறோம்.

எனவே, பாடப்புத்தகங்களுக்கு அப்பால் சிந்தித்து, நமது தேசத்தையும், மரபுகளையும், அறிவையும் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அந்தத் திசையில் பார்த்தால் நீங்கள் நிறைய விஷயங்களைக் காண்பீர்கள் என தெரிவித்தார்.

நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான் என்று பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் பேசியதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஒருவர், பள்ளி மாணவர்களிடம் நிலவில் முதன்முதலில் கால் வைத்தது நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல, அனுமன் என்று கூறுவது மிகவும் கவலையளிக்கிறது.

அறிவியல் என்பது கட்டுக்கதை அல்ல. வகுப்பறைகளில்மாணவர்களை தவறாக வழிநடத்துவது நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள அறிவு, பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையை அவமதிப்பதாகும்.

இந்தியாவின் எதிர்காலம், உண்மையை கட்டுக்கதையுடன் குழப்பிக் கொள்ளாமல், ஆர்வத்தை வளர்ப்பதில்தான் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com