என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராமேஸ்வரம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து- 3 பேர் உயிரிழப்பு
- ஆம்புலன்ஸ் வேன் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாலாந்தரவை அருகே அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.
- படுகாயம் அடைந்த ஹர்ஷித் மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைக்கப்பட்டார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை அடுத்த மரைக்காயர் பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் வருசை கனி (வயது 65). உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த இவருக்கு நேற்று உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை ஆஸ்பத்திரிக்கு சிசிக்சைக்காக அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி தனியார் ஆம்புலன்ஸ் வேன் மூலம் வருசை கனியின் மகள் அனீஸ் பாத்திமா (40) மற்றும் அவரது மருமகன் (இரண்டாவது மகளின் கணவர்) ஜகுபர் சாதிக் (47), உறவினர்கள் ஹர்ஷத் (45), கதீஜா ராணி (40), ஆயிஷா பேகம் (35) ஆகியோர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அந்த ஆம்புலன்ஸ் வேன் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாலாந்தரவை அருகே அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் அருகே விறகு ஏற்றி வந்த லாரி ஒன்று டீசல் நிரப்பி விட்டு ராமநாதபுரம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் திரும்பியது. இதில் எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறத்தில் ஆம்புலன்ஸ் வேன் மோதியது.
இந்த கோர விபத்தில் சிக்கி ஆம்புலன்சில் சிகிச்சைக்காக வந்த நோயாளி வருசை கனி, அவரது மகள் அனீஸ் பாத்திமா, ஜகுபர் சாதிக் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த ஹர்ஷித் மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைக்கப்பட்டார். கதீஜா ராணி, ஆயிஷா பேகம் ஆகிய இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் மருத்துவமனை 2-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ஆம்புலன்ஸ் அதிவேகமாக லாரியின் பின் பகுதியில் மோதியதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அருகே அமர்ந்திருந்த ஜகுபர் சாதிக் வாகனத்தில் சிக்கிக்கொண்டார். அவரை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி வாகனத்தில் இருந்து மீட்டனர். மேலும் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த திடீர் விபத்து ஏற்பட்டதால் ஆம்புலன்சுக்கு பின்னால் வந்த ஆம்னி சொகுசு பஸ் மற்றும் சொகுசு கார் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியது.
இதில் சொகுசு காரில் வந்த இருவர் லேசான காயத்துடன் தப்பினர். விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருன்றனர்.
ராமநாதபுரம் அருகே சிகிச்சைக்காக ஆம்புலன்சில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விபத்தில் பலியானது மரைக்காயர் பட்டினம் கடற்கரை கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.






