search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து- இடுப்பில் சொருகி வைத்திருந்த மதுபாட்டில்கள் குத்தியதில் வாலிபர் பலி
    X

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெகதீஸ்வரன் - பலியான சூர்யா

    மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து- இடுப்பில் சொருகி வைத்திருந்த மதுபாட்டில்கள் குத்தியதில் வாலிபர் பலி

    • சூர்யா வயிற்று பகுதியில் மறைத்து வைத்திருந்த 2 மது பாட்டில் உடைந்து அவரது வயிற்றை குத்தி கிழித்தது.
    • விபத்து தொடர்பாக தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஆரத்தி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 23). இவர் நெல் அறுவடை எந்திரத்தின் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    இவரும், இவரது நண்பர் ஜெகதீஸ்வரன் என்பவரும் தலைவாசல் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மது குடித்து விட்டு, மேலும் 2 பாட்டில் மது வீட்டுக்கு கொண்டு செல்ல வாங்கினர். இந்த மதுபாட்டிலை சூர்யா, தனது இடுப்பு பகுதியில் மறைத்து வைத்து மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். மோட்டார்சைக்கிளை சூர்யா ஓட்டினார்.

    பின்னால், ஜெகதீஸ்வரன் அமர்ந்திருந்தார். தலைவாசல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே வந்தபோது திடீரென மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் உள்ள புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

    இதனால் சூர்யா உள்ளிட்ட 2 பேரும் நிலை தடுமாறி கிழே விழுந்தனர். இதில் சூர்யா வயிற்று பகுதியில் மறைத்து வைத்திருந்த 2 மது பாட்டில் உடைந்து அவரது வயிற்றை குத்தி கிழித்தது. இதனால் அவரது உடலில் இருந்து ரத்தம் வெளியேறியது. அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்த சூர்யா மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வழியிலேயே சூர்யா பரிதாபமாக இறந்தார். உடன் வந்த ஜெகதீஸ்வரனுக்கு கை முறிவு ஏற்பட்டு அவர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மது பழக்கத்திற்கு ஆளான வாலிபரை, மதுபாட்டிலே உயிரை பறித்துள்ள சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விபத்து தொடர்பாக தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×