search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொங்கலுக்கு முன்பாக திறக்கப்படுமா கிளாம்பாக்கம் பஸ் நிலையம்?
    X

    பொங்கலுக்கு முன்பாக திறக்கப்படுமா கிளாம்பாக்கம் பஸ் நிலையம்?

    • கடந்த 10-ந்தேதி அல்லது 15-ந்தேதி பஸ் நிலையத்தை திறந்துவிடலாம் என்று அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர்.
    • திறப்பு விழாவையொட்டி அழைப்பிதழ் தயாரிக்கும் பணிகள், கல்வெட்டு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடி செலவில் புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தின் கட்டுமான பணிகள் சில மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டன.

    அதன் பிறகு இணைப்பு சாலை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் அனைத்து பணிகளும் முடிந்து பஸ் நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராக இருக்கிறது. கடந்த 10-ந்தேதி அல்லது 15-ந்தேதி பஸ் நிலையத்தை திறந்துவிடலாம் என்று அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் 'மிக்ஜம்' புயலால் பெய்த பலத்தமழை காரணமாக திறப்பு விழா நடத்தப்படவில்லை.

    இந்நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட உள்ளது.

    கிளாம்பாக்கம் பஸ் நிலைய பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. பஸ் நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. முதல்- அமைச்சரின் தேதிக்காக காத்திருக்கிறோம். முதல்-அமைச்சர் தேதி கொடுத்ததும் பஸ் நிலையத்தை திறப்பதற்கான பணிகளை தொடங்கி விடுவோம். பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் பஸ் நிலைய திறக்கப்படும்.

    திறப்பு விழாவையொட்டி அழைப்பிதழ் தயாரிக்கும் பணிகள், கல்வெட்டு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 'கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்' என்று பெயரிடப்பட்டு அதன் அடிப்படையிலேயே அழைப்பிதழ்கள் தயாரிக்கப்பட உள்ளன.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கட்டுமான பிரிவு கட்டியுள்ளது. அதற்கு முறையான பணி நிறைவு சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை.

    மேலும் மாற்றுத் திறனாளிகளுகான வசதிகள் முறையாக இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை முடித்து பணி நிறைவு சான்றிதழ் பெறும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×