search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைய வாய்ப்பில்லை- டி.டி.வி. தினகரன்
    X

    அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைய வாய்ப்பில்லை- டி.டி.வி. தினகரன்

    • தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் ஆனவுடன் மு.க.ஸ்டாலின் மறந்து விட்டார்.
    • தி.மு.க. ஆட்சி விளம்பரங்களால் ஓடிக் கொண்டிருக்கிறது.

    குன்னூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓராண்டு தி.மு.க. ஆட்சி என்பது மக்களுக்கு கிடைத்த தண்டனை. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் ஆனவுடன் மு.க.ஸ்டாலின் மறந்து விட்டார். குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் தருவேன் என்றார். அதை மறந்து விட்டார்.

    சொத்து வரியை உயர்த்த மாட்டேன் என்று கூறினார். பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக சொன்னார். அவற்றை மறந்து விட்டார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்கள் எல்லாவற்றையும் மூடுவிழா செய்து விட்டனர்.

    தி.மு.க. ஆட்சி விளம்பரங்களால் ஓடிக் கொண்டிருக்கிறது. அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு லஞ்ச ஊழல் ஒழிப்பு என்பதெல்லாம் ஊடக வெளிச்சத்துக்காக மு.க.ஸ்டாலின் செய்கிறார்.

    காவல்துறையினருக்கு அதிகாரம் இருப்பதால் அத்துமீறி செயல்படுவது மக்கள் மத்தியில் அவப்பெயரை தான் ஏற்படுத்துகிறது. காவல்துறையினர் கவனமுடன் செயல்பட வேண்டும்.

    அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. இணைய வாய்ப்பில்லை. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை அரசு கண்டறிய வேண்டும். சசிகலா பா.ஜ.க.வுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறி வருகிறார். அதுகுறித்து சசிகலா தான் கூற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து டி.டி.வி. தினகரன் இன்று பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூரில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.

    Next Story
    ×