search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்: முதலமைச்சர் உத்தரவுப்படி அரசு மரியாதையுடன் அடக்கம்
    X

    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்: முதலமைச்சர் உத்தரவுப்படி அரசு மரியாதையுடன் அடக்கம்

    • வடிவேல் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.
    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் மூளைச்சாவு அடைந்த வடிவேல் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 44). இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் முதுநிலை ஆய்வாளராக பணிபுரிந்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளராகவும் உள்ளார். இவரது மனைவி பட்டு லெட்சுமி (38). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வடிவேல் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 23-ந் தேதி வடிவேல் அலுவலக பணிகளை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.

    சீலையம்பட்டி அருகே வந்தபோது சாலையின் குறுக்கே வந்த மாடு அவரது மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் தவறி கீழே விழுந்த வடிவேல் தலை, காது, மூக்கு பகுதியில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் வடிவேலின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதன்படி மதுரையில் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் அவரது சொந்த ஊரில் வடிவேல் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த வடிவேலின் உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேனி மாவட்டத்துக்கு வருகை தந்தார். அவர் மூளைச்சாவு அடைந்த வடிவேல் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே, கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்குப் பின் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த நபரின் உடல் முதன் முறையாக அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவது சின்னமனூரில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×