search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மத்திய அரசு பணியில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்- பிரதமருக்கு, முதலமைச்சர் வலியுறுத்தல்
    X

    மு.க.ஸ்டாலின்,நரேந்திர மோடி(கோப்பு படம்)

    மத்திய அரசு பணியில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்- பிரதமருக்கு, முதலமைச்சர் வலியுறுத்தல்

    • கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் திறமையுடன் கூடிய மனித வளத்தை தமிழ்நாடு கொண்டுள்ளது.
    • மத்திய அரசின் பணியாளர் தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

    நாட்டில் அனைத்துத் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்குவதன் மூலம் மட்டுமே சிறந்த சேவை வழங்குவதை உறுதிசெய்திட முடியும். நல்ல நிர்வாகத்திற்கு பொது மக்களுடன் இணக்கமாகப் பழகுதல், உள்ளூர் மொழி தெரிந்திருத்தல், கலாச்சாரத்தில் பரிச்சயம் போன்றவை முக்கியமானவை.

    கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் ஒப்பீட்டளவில் பரந்த அறிவு மற்றும் திறமையுடன் கூடிய மனித வளங்களை தமிழ்நாடு கொண்டுள்ளதால், அவற்றை நன்கு பயன்படுத்திட முடியும். மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பணி நியமனத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பல்வேறு மாணவர் நலச்சங்கங்கள், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தென் மண்டலத்தில் ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்ந்தவர்கள் அல்ல. இது வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், சமூக, அரசியல் வட்டாரத்தில் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய சமச்சீரற்ற பணித் தேர்வு முறை தவிர்க்கப்பட வேண்டிய தாக்கங்களைக் கொண்டிருக்கிறது.

    மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளையும் தமிழில் நடத்த வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பணி நியமனத்தில் தமிழ்நாட்டை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டிலுள்ள ரயில்வே நிறுவனங்களில் பயிற்சி பெறுவோருக்கு, 20 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் நேரடி நியமனங்களில், பிராந்திய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்திடும் வகையில் முன்னுரிமை அளித்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×