search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரீல்ஸ் மோகத்தில் விபரீத வீடியோக்கள் தயாரித்து வெளியிட்ட யூடியூபர் கைது
    X

    'ரீல்ஸ்' மோகத்தில் விபரீத வீடியோக்கள் தயாரித்து வெளியிட்ட யூடியூபர் கைது

    • வீடியோக்கள் பல லட்சம் பயனர்களால் பார்க்கப்பட்டு போலீசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி யூ-டியூபர் ரஞ்சித் பாலா மற்றும் அவரது நண்பர் சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வாலத்தூரைச் சேர்ந்தவர் ரஞ்சித் பாலா (வயது 23).

    யூ-டியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் தயாரித்து பதிவிட்டு லைக்குகளையும், ஷேர்களையும் குவிப்பதற்காக சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்களையும் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அதன்மூலம் லட்சங்களை சம்பாதித்து வருகிறார். இவருக்கு யூ-டியூபில் 22 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் இவர் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவை குளத்தின் அருகே உள்ள முத்துலிங்கம் (75) என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில், தற்போது மழை வெள்ளத்தின் காரணமாக அப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    ரஞ்சித் பாலா தனது நண்பர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் மோகத்தில் அப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் சென்று ஒரு கட்டிடத்தின் மேலே நின்று கீழே நண்பர்களை நிற்க வைத்து, குளத்திற்குள் பெட்ரோலை ஊற்றி அதில் தீ வைத்து அந்த தீயில் குதிப்பது போல சாகச வீடியோ பதிவிட்டு அதை யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பதிவிட்டு உள்ளார்.

    அதில் அருகில் நின்ற நண்பர்கள் மீது இந்த தீ பரவுகிறது. ஆனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவரது சமூக வலைதள பக்கங்களில் தேரிக்காட்டில் மண்ணுக்குள் தலைகீழாக புதைந்து நின்று சில மணி நேரம் கழித்து வெளியே வரும் வீடியோக்கள் என பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் பல லட்சம் பயனர்களால் பார்க்கப்பட்டு போலீசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.



    அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார் இந்த வீடியோவில் இருக்கும் நபர்களை தேடிப்பிடித்து விசாரணை நடத்தி ரஞ்சித் பாலா, சிவக்குமார், இசக்கி ராஜா ஆகிய 3 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 277-தண்ணீரை மாசுபடுத்துதல், 278-சுற்றுச்சூழலை மாசுபடுத்துதல், 430-நீர்ப்பாசன பணிகளில் காயம் ஏற்படுத்துதல், 285-பிற நபருக்கு காயம் ஏற்படுத்துதல், 308-மரணத்தை விளைவிக்கும் என தெரிந்தே முயற்சி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி யூ-டியூபர் ரஞ்சித் பாலா மற்றும் அவரது நண்பர் சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×