search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை பெண்ணை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்- 4 வாலிபர்கள் மீது புகார்
    X

    செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை பெண்ணை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்- 4 வாலிபர்கள் மீது புகார்

    • இளம்பெண்ணும், மலையூரை சேர்ந்த வாலிபர் ஒருவரும் நண்பர்களாக பழகி உள்ளனர்.
    • வாலிபரும், இளம்பெண்ணும் நேற்று இரவு செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து மாம்பாக்கம் பகுதிக்கு தனியாக சென்றதாக தெரிகிறது.

    செங்கல்பட்டு:

    சென்னை சைதாப்பேட்டையில் தங்கி 21 வயது இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் ஆகும்.

    இந்த நிலையில் நேற்று இரவு அவர் செங்கல்பட்டு அருகே உள்ள சாலவாக்கம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் தன்னை 4 பேர் கும்பல் கற்பழித்துவிட்டதாக அங்கிருந்த பொதுமக்களிடம் தெரிவித்தார்.

    மேலும் இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் புகார் தெரிவித்தார். இதுபற்றி அறிந்ததும் சாலவாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது இளம்பெண் போலீசாரிடம் கூறும்போது, செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சைதாப்பேட்டை செல்வதற்காக காத்திருந்தேன். அப்போது அங்குவந்த 4 பேர் என்னை மிரட்டி வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். பின்னர் அவர்கள் கூட்டு பலாத்காரம் செய்து தப்பி ஓடிவிட்டனர் என்று கூறினார்.

    இதையடுத்து போலீசார் இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் மேலும் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக கூறிவருகிறார். இதனால் போலீசார் கற்பழிப்பு குற்றம் நடந்ததா? என்ற முடிவுக்கு வரமுடியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

    அந்த இளம்பெண்ணும், மலையூரை சேர்ந்த வாலிபர் ஒருவரும் நண்பர்களாக பழகி உள்ளனர். நேற்று இரவு அவர்கள் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து மாம்பாக்கம் பகுதிக்கு தனியாக சென்றதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இளம்பெண் தனது நண்பர் உள்ளிட்ட 4 பேர் கற்பழித்ததாக குற்றம் சாட்டி உள்ளார்.

    இதுதொடர்பாக சாலவாக்கம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செங்கல்பட்டு ரெயில் நிலையம் மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    மேலும் இளம்பெண்ணும் தொடர்பில் இருந்த வாலிபர் மற்றும் அவரது நண்பர்கள் குறித்தும் தகவல்களை சேகரித்து வருகிறார்கள். இளம்பெண் எதற்காக செங்கல்பட்டு வந்தார் என்றும் விசாரணை நடக்கிறது.

    பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னைக்கு செல்வதற்காக செங்கல்பட்டு ரெயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த இளம்பெண், 4 பேர் கொண்ட கும்பலால் மகிழுந்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

    ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை கடத்தி, பல கிலோமீட்டர் தொலைவுக்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறது என்றால், அதற்கு பாதுகாப்பு குறைபாடுகள் தான் காரணம். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    பாலியல் வன்கொடுமை செய்தால், மிகக்குறைந்த காலத்தில் மிகக் கடுமையாக தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் குற்றவாளிகளுக்கு இல்லாதது தான் இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் ஆகும். பாலியல் குற்ற வழக்குகளில் விரைவாக தீர்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். பொது இடங்களிலும், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் காவல்துறை பாதுகாப்பை வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×