search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரை மார்க்கெட்டுகளில் 100 ரூபாயை தாண்டியது- தக்காளிக்கு போட்டியாக விலை உயர்ந்த சின்னவெங்காயம்
    X

    மதுரை மார்க்கெட்டுகளில் 100 ரூபாயை தாண்டியது- தக்காளிக்கு போட்டியாக விலை உயர்ந்த சின்னவெங்காயம்

    • உழவர் சந்தைகளில் கிலோ 90 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி வெளிமார்க்கெட்டுகளில் 120 ரூபாய் வரை விற்பனையாகிறது.
    • பச்சை மிளகாய் சீசன் இல்லாததாலும், வரத்து குறைந்ததாலும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மதுரை:

    சமீப காலமாக காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகிறது. தற்போது பல்வேறு பகுதிகளில் காய்கறி உற்பத்தி அதிகளவில் செய்யப்பட்டாலும் மழை மற்றும் பூச்சி தாக்குதல் காரணமாக காய்கறி மகசூல் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் காய்கறி விளைச்சல் குறைந்து காணப்படுகிறது.

    நாட்டு காய்கறிகளான கத்தரிக்காய், வெண்டை, புடலை மற்றும் சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் வரத்தும் கணிசமாக குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதன் காரணமாக மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி உள்ளிட்ட காய்கறிகள் கிலோ 100 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று வியாபாரிகளும் தெரிவித்துள்ளனர்.

    தக்காளி வரத்து தொடர்ந்து குறைந்து காணப்படுவதால் மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி விலை கடந்த ஒரு வாரமாக 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    உழவர் சந்தைகளில் கிலோ 90 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி வெளிமார்க்கெட்டுகளில் 120 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த வரிசையில் கடந்த சில வாரங்களாக கிலோ 50 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் இன்று கிடுகிடுவென விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உழவர் சந்தைகளில் முதல் தர சின்ன வெங்காயம் கிலோ 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டுகளில் 110 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

    இதுபோல இஞ்சி கிலோ 220 ரூபாய்க்கு உழவர் சந்தைகளில் விற்பனையானது. வெளி மார்க்கெட்டுகளில் 260 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சமீப காலமாக கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பச்சை மிளகாய் இன்று திடீரென விலை எகிறியது.

    உழவர் சந்தையில் 130 ரூபாய்க்கு பச்சை மிளகாய் விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டுகளில் 160 ரூபாய் வரை விற்பனையானது. பச்சை மிளகாய் சீசன் இல்லாததாலும், வரத்து குறைந்ததாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இது தவிர மற்ற காய்கறிகள் உழவர் சந்தைகளில் இன்று விற்பனை செய்யப்பட்ட விலை விவரம் வருமாறு:-

    உருளைக்கிழங்கு-ரூ.50, கேரட்-ரூ. 70, முட்டைகோஸ்-ரூ.28, பீட்ரூட்-ரூ.40, சவ் சவ்-ரூ.24, முருங்கை பீன்ஸ்-ரூ.110, பட்டர் பீன்ஸ்-ரூ.110, சோயா பீன்ஸ்-ரூ.110, பச்சை பட்டாணி-ரூ.170, நூல்கோல்-ரூ.70, டர்ணிப்-ரூ.60, குடை மிளகாய்-ரூ.70, காளிபிளவர்-ரூ.35, வெள்ளைபூண்டு-ரூ.200,

    கத்தரிக்காய்-ரூ.42, வெண்டைக்காய்-ரூ.26, புடலை-ரூ.30, பீர்க்கங்காய்-ரூ.60, சுரைக்காய்-ரூ.24, பெரிய வெங்காயம்-ரூ.25, பூசணி-ரூ.18, சர்க்கரை பூசணி-ரூ.24, அவரை-ரூ.90, சிறிய பாகற்காய்-ரூ.140, பெரிய பாகற்காய்-ரூ.60, கொத்தவரை-ரூ.36, கறிவேப்பிலை-ரூ.42, புதினா-ரூ.40, கொத்தமல்லி-ரூ.100, முருங்கைக்காய்-ரூ.60, கோவக்காய்-ரூ.25, மொச்சைக்காய்-ரூ.55, முள்ளங்கி-ரூ.24 ஆகிய விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டன.

    கடந்த சில நாட்களில் விற்கப்பட்ட விலையை ஒப்பிடுகையில் ஒவ்வொரு காய்கறிகளும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ. 30 வரை விலை அதிகரித்துள்ளது.

    உழவர் சந்தைகளில் இந்த விலையில் காய்கறிகள் விற்கப்பட்டாலும் காய்கறி மார்க்கெட்டுகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் காய்கறிகளை வாங்க உழவர் சந்தைகளை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால் மதுரை பீ.பி.குளம், பழங்காநத்தம், அண்ணாநகர் உழவர் சந்தைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    Next Story
    ×