search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காத சம்பவம்- விளக்கம் அளித்த அமைச்சர் உதயநிதி
    X

    தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காத சம்பவம்- விளக்கம் அளித்த அமைச்சர் உதயநிதி

    • ஒரு கோடியே இருபது லட்சம் மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
    • 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடமும் விரைவில் திறக்கப்பட இருக்கிறது.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை அருகில் உள்ள அண்ணா சதுக்கம் பஸ் நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    நீண்ட நாட்களாக பஸ் நிலையம் திறந்த வெளியில் இருந்ததால் வெயில், மழை காலங்களில் பயணிகள் ஒதுங்குவதற்கு இடமின்றி தவித்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று அங்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு பஸ் நிலையத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    பேருந்து நிலையத்தை திறந்து வைத்த பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:-

    ஒரு கோடியே இருபது லட்சம் மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடமும் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. அண்ணா சதுக்கத்தில் ஏற்கனவே கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கும் கழிப்பிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்காதது குறித்த தீவிர விசாரணை செய்த பின் தான் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தகவல் பரிமாற்ற குழப்பத்தால் இது நடந்து விட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும்.

    கடந்த 2 ஆண்டுகளாக தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறாமல் இருந்து உள்ளது. காணொலி மூலமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். அதன் பின் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுள்ளனர். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், எழிலன் எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், மண்டல குழு தலைவர் மதன்மோகன், பணிகள் நிலைக்குழு தலைவர் சிற்றரசு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

    Next Story
    ×