search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொரோனா தாக்கத்துக்கு பிறகு ஃப்ளூ காய்ச்சல் அதிகரிப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
    X

    கொரோனா தாக்கத்துக்கு பிறகு ஃப்ளூ காய்ச்சல் அதிகரிப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

    • எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 129 குழந்தைகளில் 121 பேருக்கு சாதாரண காய்ச்சல், 8 பேருக்கு டெங்கு காய்ச்சல்.
    • மருத்துவமனைகளில் தேவையான அளவு மருந்து கையிருப்பில் உள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரியவர்களை விட குழந்தைகளை காய்ச்சல் அதிக அளவில் பாதிக்கிறது.

    சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    தமிழகத்தில் கோடை காலம் முடிந்து பருவ மழை காலம் தொடங்கும் நிலையில் சாதாரண காய்ச்சல் மற்றும் ப்ளூ காய்ச்சல் பரவி வருகிறது. இது தொடர்பாக டாக்டர்கள் கூறியதாவது:-

    இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, தலை வலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை ப்ளூ காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஆகும். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் டாக்டர்களிடம் உரிய ஆலோசனை பெற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    பருவநிலை மாற்றம் காரணமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும் இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. மருத்துவர்களின் பரிந்துரைபடி மட்டுமே சிகிச்சை எடுக்க வேண்டும். ப்ளூ வைரஸ் களால் பரவும் 'இன்ப்ளூயன்ஸா' காய்ச்சல் நேரடியாக நுரையீரலை பாதிக்கக் கூடியது.

    எனவே நோய் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் டாக்டரை உடனடியாக மக்கள் அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கிடையே சென்னையில் ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருவதாக தகவல் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்ப்ளூயன்ஸா எனப்படும் ப்ளூ காய்ச்சல் பரவுவது தொடர்பாக தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டோம். தமிழகம் முழுவதும் ப்ளூ காய்ச்சலால் 282 குழந்தைகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 குழந்தைகள் அரசு மருத்துவமனைகளிலும், 215 குழந்தைகள் தனியார் மருத்துவமனைகளிலும், 54 குழந்தைகள் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெறுகிறார்கள்.

    கடந்த ஆண்டு போலத் தான் குளிர்காற்று, ஈரப்பதம் காரணமாக இந்த காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கோவிட் தொற்றால் முககவசம் அணிந்து அதிக இடை வெளியை கடைபிடித்தோம். இதனால் ப்ளூ காய்ச்சல் பாதிப்பு குறைவாக இருந்தது.

    ஆனால் கடந்த 2017, 2018-ம் ஆண்டுகளில் இப்போதைய பாதிப்பை விட ப்ளூ காய்ச்சல் பாதிப்பு 3 மடங்கு அதிகமாக இருந்தது. எனவே ப்ளூ காய்ச்சலுக்கு பொதுமக்கள் பதட்டப்படவோ, பயப்படவோ தேவை இல்லை. எழும்பூர் மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 129 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களில் ப்ளூ காய்ச்சல் யாருக்கும் இல்லை. 121 பேர் சாதாரண காய்ச்சலாலும், 8 பேர் டெங்கு காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ப்ளூ காய்ச்சல் பாதித்த குழந்தைகளை 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.

    காய்ச்சல் பாதித்தவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் ப்ளூ வைரஸ் காற்றின் மூலம் மற்றவர்களை பாதிக்கிறது. எனவே குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லும்போது முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடை பிடிக்க சொல்ல வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

    ஒரு குடும்பத்தில் 2 குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் ஒரு குழந்தைக்கு ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டிருந்தால் மற்றொரு குழந்தைக்கும் பரவ வாய்ப்பு அதிகம். எனவே வீடுகளில் 2 மீட்டர் இடைவெளியை ஏற்படுத்தி குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×