search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பதி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்த கடை ஊழியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளை
    X

    திருப்பதி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்த கடை ஊழியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளை

    • பீரோவில் இருந்து நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
    • கோவிலுக்கு சென்றிருந்தவர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் நான்கு வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர், கன்னியாகுமரியில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.

    கோபி கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் இன்று காலையில் அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது.

    இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். அது பற்றி அவர்கள், கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது கோபியின் வீட்டில் உள்ள அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அந்த பீரோவில் இருந்து நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    யாரோ மர்ம நபர்கள் கோபியின் வீட்டில் ஆட்கள் இல்லாததை பயன்படுத்தி, அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து கைவரிசை காட்டியது தெரிய வந்தது. கோபி தனது குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றிருப்பதால், அவரது வீட்டில் எவ்வளவு நகை-பணம் கொள்ளை போயுள்ளது என்பன உடனடியாக தெரியவில்லை.

    அவரிடம் போலீசார் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, வீட்டு பீரோவில் ரூ.1½ ரொக்கப்பணம் மற்றும் 5½ தங்க நகைகள் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். அவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. கொள்ளை போன நகைகள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் என்று கூறப்படுகிறது.

    கொள்ளை நடந்த கோபியின் வீட்டிற்கு தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது அங்கிருந்த சிறிது தூரம் ஓடி விட்டு நின்றது.

    கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காண அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் கைப்பற்றி அதில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோவிலுக்கு சென்றிருந்தவர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×