search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கரும்பு விவசாயிகளை திரட்டி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி
    X

    கரும்பு விவசாயிகளை திரட்டி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி

    • செங்கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
    • அரசு அறிவித்த ஒரு கரும்புக்கு விலையான 33 ரூபாய் முழுவதுமாக விவசாயிகளுக்கு சென்றடைவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு முழு செங்கரும்பு வழங்கப்படும் என்று அறிவித்த அரசு ஒரு கரும்பு 33 ரூபாய் வீதம் 2.19 கோடி கரும்புகள் கொள்முதல் செய்வதற்காக 72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு கரும்புக்கு அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 33 ரூபாய்.

    ஆனால் இப்போது மாநிலம் முழுவதும் அதிகாரிகளும், இடைத்தரகர்களும் இணைந்து ஒரு கரும்புக்கு 15 முதல் 18 ரூபாய் வரை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்குவதாகவும், கரும்பு கொள்முதலில் பெரிய முறைகேடுகள் நடைபெறுவதாகவும் செய்திகள் வருகின்றன.

    செங்கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அரசு அறிவித்த ஒரு கரும்புக்கு விலையான 33 ரூபாய் முழுவதுமாக விவசாயிகளுக்கு சென்றடைவதை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

    அரசு அறிவித்த கரும்புக்கான முழு தொகையும் விவசாயிகளைச் சென்றடையாவிடில், பொறுப்புள்ள எதிர்கட்சியான நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்றும், அ.தி.மு.க. சார்பில் செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அரசை எச்சரிக்கை செய்கிறேன்.

    கரும்பு கொள்முதலில் கமிஷன் அடிக்கும் நோக்கத்தோடு அதிகாரிகள் செயல்படுவது, இடைத்தரகர்களை பயன்படுத்துவது போன்ற அரசின் விவசாய விரோத செயல்களுக்கு அ.தி.மு.க. சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×