search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சட்ட ஒழுங்கு பிரச்சினையால் தி.மு.க. அரசு விரைவில் கலைக்கப்படும்- எச்.ராஜா ஆவேசம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சட்ட ஒழுங்கு பிரச்சினையால் தி.மு.க. அரசு விரைவில் கலைக்கப்படும்- எச்.ராஜா ஆவேசம்

    • சட்டத்தை மதிக்காமல் முதலமைச்சரை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள்.
    • பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதோர் நுழைவது என்பது சட்டவிரோதம்.

    பழனி:

    பழனி மலைக்கோவில் பாதுகாப்பு பேரவை சார்பில் பழனி மயில் ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய முன்னாள் செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதோர் நுழைவது என்பது சட்டவிரோதம். தமிழக அரசுதான் மதசார்பற்றதே தவிர, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மத சார்புடையதுதான். அறநிலையத்துறை என்பது இந்து மதம் மற்றும் பண்பாட்டை பரப்பக்கூடிய செயலை செய்யவேண்டும். துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு இந்து மதத்திற்கு எதிரான அனைத்து பணிகளையும் செய்துவருகிறார்.

    உதாரணமாக கள்ளிமந்தையம் பகுதியில் பழனி கோவிலுக்கு சொந்தமான கோசாலை பசுக்கள் பராமரிப்பின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. இங்குள்ள பல மாடுகள் கேரளாவுக்கு அடிமாட்டிற்கு அனுப்பப்படுகிறது. பசுக்களை இல்லாமல் செய்துவிட்டு 288 ஏக்கரில் அமைந்துள்ள கோசாலை நிலத்தை சிப்காட் நிறுவனம் அமைக்க சேகர்பாபு முயற்சி செய்கிறார். இந்து சமய அறநிலையத்துறை அரசுக்கு சொந்தமானது தவிர, இந்து கோவில்கள் அரசுக்கு சொந்தமானது அல்ல. அது இந்து மக்களுக்கு சொந்தமானது.

    பழனி கோவிலுக்கு அனைத்து மதத்தினரும் வரலாம் என்றால் கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் முன்பு நடந்த சம்பவம் போல வரும் காலங்களில் பழனி கோவிலில் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது பெரிய பிரச்சனையாக இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளது கேலிக்குரியது.

    பா.ம.க. தொண்டர் வெட்டிக்கொலை, விசாரணை கைதி மரணம் ஆகியவை நடந்துள்ள நிலையில், முதலமைச்சருக்கு தங்களது குடும்பத்தில் எப்போது சி.பி.ஐ. நுழையுமோ? என்ற அச்சம், துர்கா ஸ்டாலின் தவிர மற்ற அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி என்பதால், சி.பி.ஐ. தமிழகத்திற்குள் நுழையக்கூடாது என்று தெரிவித்திருப்பது ஆகியவை எல்லாம் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தெளிவாக விளக்குகிறது.

    தி.மு.க. ஆட்சி இன்னும் ஓரிரு வாரத்தில் கலைக்கப்படலாம். குற்றம் செய்த அமைச்சரை காப்பாற்ற முயல்வதும், 38 நாட்களாக ஒரு அமைச்சரை ஆஸ்பத்திரியில் வைத்துள்ளதும் மற்றும் அவருக்கு என்ன ஆனது என்பது குறித்தும் இதுவரைதெளிவாக தெரியவில்லை. சட்டத்தை மதிக்காமல் முதலமைச்சரை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×