என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திண்டுக்கல் அருகே செல்போன் தகராறில் வாலிபர் அடித்துக்கொலை
- ஜோஸ்வாவின் மாமியாரிடம் அதேபகுதியை சேர்ந்த சிலர் பணம் கேட்டு தகராறு செய்து வந்தனர்.
- ஆற்றுப்பாலம் அருகே அமர்ந்திருந்த அவர்களிடம் ஜோஸ்வா தனது மாமியாரின் செல்போனை தருமாறு கேட்டுள்ளார்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் உண்டாரபட்டி அருகே உள்ள பிறகரை ஸ்டெல்லா நகரை சேர்ந்தவர் எட்வின்ஜோஸ்வா(28) கூலித்தொழிலாளி. இவருக்கு கிறிஸ்டி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். ஜோஸ்வாவின் மாமியாரிடம் அதேபகுதியை சேர்ந்த சிலர் பணம் கேட்டு தகராறு செய்து வந்தனர்.
நேற்றும் அவரது மாமியாரிடம் தகராறுசெய்த கும்பல் அந்த பெண்ணிடம் இருந்த செல்போனை பறித்துச்சென்றுவிட்டனர். இதுகுறித்து ஜோஸ்வாவிடம் அவரது மாமியார் தெரிவித்தார். இதனையடுத்து சந்தானவர்த்தினி ஆற்றுப்பாலம் அருகே அமர்ந்திருந்த அவர்களிடம் ஜோஸ்வா தனது மாமியாரின் செல்போனை தருமாறு கேட்டுள்ளார்.
இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த கும்பல் ஜோஸ்வாவை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுவிட்டனர். படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி கிறிஸ்டி வேடசந்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்மணி வழக்குபதிவு செய்து தலைமறைவான கும்பலை தேடி வருகின்றனர்.






