search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குஷ்புவுக்கு எதிராக காங்கிரசார் போராட்டம்; உருவ பொம்மை எரிப்பு-100 பேர் கைது
    X

    குஷ்புவுக்கு எதிராக காங்கிரசார் போராட்டம்; உருவ பொம்மை எரிப்பு-100 பேர் கைது

    • குஷ்பு வீட்டுக்கு செல்லும் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவோம்.

    சென்னை:

    நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா பற்றி வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்தார். அப்போது சமூக வலைத் தளத்தில் குஷ்புவுக்கு எதிராக பதிவிட்டவருக்கு அளித்த பதிவில் சேரிமொழி என்று குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் எஸ்.சி. துறை கண்டனம் தெரிவித்தது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தியது.

    ஆனால் 'சேரி' என்ற பெயரில் எத்தனையோ ஊர்கள் உள்ளன. பிரஞ்சு மொழியில் சேரி என்பதற்கு அன்பு என்று அர்த்தம். நல்ல எண்ணத்தோடு வெளியிட்ட பதிவை உள் நோக்கத்தோடு எதிர்த்தால் நான் பொறுப்பல்ல. எனவே வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று மறுத்துவிட்டார்.

    ஆனால் காங்கிரஸ் எஸ்.சி. துறையினர் குஷ்பு மன்னிப்பு கோர வலியுறுத்தி மாநில தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் இன்று குஷ்பு வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதையொட்டி சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள குஷ்பு வீட்டுக்கு செல்லும் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


    அந்த ரோட்டில் யாரையும் அனுமதிக்கவில்லை. பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் அருகே உள்ள சாலையில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதித்தனர். இன்று காலை 10 மணிக்கே அந்த ரோட்டில் காங்கிரசார் திரண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் திரண்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குஷ்புவின் உருவ பொம்மையையும் எரித்தனர். செருப்பு மற்றும் துடைப்பத்தாலும் அடித்தார்கள்.

    போராட்டத்தையொட்டி பா.ஜனதா செயலாளர் கராத்தே தியாகராஜன் குஷ்பு வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். பின்னர் வெளியே வந்த அவர், காங்கிரசார் மிகவும் அநாகரீகமாக நடந்துள்ளனர். குஷ்பு வழக்குகளை சட்டப்படி சந்திப்பார் என்றார்.

    மாநில எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட ரஞ்சன்குமார் கூறியதாவது:-

    இது எங்களின் முதற்கட்ட போராட்டம்தான். மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவோம். நாளை அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.சி.துறை மாவட்ட தலைவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுப்பார்கள்.

    இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யும்படி மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் புகார் செய்வோம். அதன் பிறகு குஷ்புவை கண்டிக்கவும், நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கவும் கோரி நடிகர் சங்க தலைவரிடம் புகார் அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

    போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அணுகுண்டு ஆறுமுகம், செயலாளர் விஜயசேகர், மாவட்ட தலைவர் துரை, மயிலை தரணி, உமாபாலன், நிலவன், வை.பிரபா, மீரா, சரளா, மஞ்சுளா, திரேசா, மாலதி, ராஜலட்சுமி, சுமதி, ரஞ்சித்குமார், சரத்குமார், இந்து மதி, ராஜவிக்ரமன், வினோத் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×