search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பூத் கமிட்டி அமைக்காத அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை... எடப்பாடி பழனிசாமி திட்டம்
    X

    பூத் கமிட்டி அமைக்காத அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை... எடப்பாடி பழனிசாமி திட்டம்

    • நாம் தமிழர் கட்சியை சேர்க்க முயற்சி எடுத்ததாகவும் ஆனால் தனித்து போட்டியிடும் முடிவில் சீமான் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    • கூட்டணி பேச்சுவார்த்தைகளை எடப்பாடி பழனிசாமி நேரடியாக கவனிக்கிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை முழு வேகத்துடன் சந்திக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.

    பா.ஜனதாவுடன் கடைசி நேரத்தில் கூட்டணி வரலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் திருச்சி வந்த பிரதமர் மோடியை சந்திக்காமல் தவிர்த்ததன் மூலம் கூட்டணிக்கான வாய்ப்பே இல்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

    கூட்டணி அமைப்பதற்கான அதிகாரத்தை பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள் வழங்கினார்கள். கூட்டணி கதவுகளை திறந்து வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி விடுதலை சிறுத்தைகள் தங்கள் பக்கம் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்.


    நாம் தமிழர் கட்சியை சேர்க்க முயற்சி எடுத்ததாகவும் ஆனால் தனித்து போட்டியிடும் முடிவில் சீமான் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய ஜனநாயக கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இன்னும் தங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவில்லை.

    எனவே சிறு சிறு கட்சிகளை கூட்டணியில் சேர்த்து 10 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பங்கிட்டு கொடுத்துவிட்டு 30 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

    கூட்டணி பேச்சுவார்த்தைகளை எடப்பாடி பழனிசாமி நேரடியாக கவனிக்கிறார்.

    இன்னொரு பக்கத்தில் கீழ்மட்டத்தில் நிர்வாகிகளை முடுக்கி விடவும் திட்டமிட்டு உள்ளார். இதற்காக வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    ஏற்கனவே மிகவும் அடிப்படையாக கருதப்படும் பூத் கமிட்டிகளை அமைக்கவும், அதை மேற்பார்வையிட்டு தகவல்கள் அடங்கிய பென்டிரைவை வழங்க பொறுப்பாளர்களுக்கும், பூத் கமிட்டி பட்டியலை வழங்க மாவட்ட செயலாளர்களுக்கும் உத்தரவிட்டு இருந்தார்.

    அதன்படி எடப்பாடி பழனிசாமியிடம் பட்டியல்களை ஒப்படைத்தனர். அதில் 60 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இன்னும் 40 சதவீதம் பூத் கமிட்டி அமைக்க வேண்டி உள்ளது.

    இடையில் மழை காரணமாக அந்த பணிகள் விரைவுபடுத்தப்படவில்லை. நடைபெற இருக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பூத் கமிட்டி நிலவரம் தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களிடமும் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளார். குறிப்பிட்ட காலகெடுவுக்குள் நூறு சதவீதம் பூத் கமிட்டி அமைக்காத மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் திட்டமிட்டு இருப்பதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே தெரு முனை கூட்டங்கள், திண்ணை பிரசாரங்கள் செய்ய திட்டமிட்டு மழையின் காரணமாக நடைபெறவில்லை. அவற்றை நடத்துவது பற்றியும் விவாதிக்க உள்ளார்.

    அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. தேர்தல் வேலைகளை உடனடியாக தொடங்க பல்வேறு வேலை திட்டங்களையும் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×