என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருப்பூரில் தயாரான 4 லட்சம் டீ-சர்ட் பனியன்கள்: மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கும் பணிகள் மும்முரம்

    • சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 24-ந்தேதி தி.மு.க. 2-வது இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது.
    • ஆர்டர் கொடுத்ததுமே 4 நிறுவனங்களிலும் பனியன் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் மூலம் பனியன் உள்ளிட்ட ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் விளையாட்டு போட்டிகள், கோவில் திருவிழாக்கள், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் அணியும் வகையில் ஆர்டரின் பேரில் டீ-சர்ட் பனியன்கள் தயாரித்து கொடுக்கப்படுகிறது.

    இந்தநிலையில் சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ள தி.மு.க. 2-வது இளைஞரணி மாநாட்டிற்காக திருப்பூர் பனியன் நிறுவனங்களில் 4 லட்சம் டீ-சர்ட் பனியன்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பனியன் உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:-

    சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 24-ந்தேதி தி.மு.க. 2-வது இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கும் இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்கள் அணிவதற்காக தி.மு.க., சார்பில் 4 லட்சம் பனியன்கள் தயாரிக்க திருப்பூரில் உள்ள 4 பனியன் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கப்பட்டது. முதலில் 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணி மாநாடு நடைபெற இருந்த நிலையில், சென்னை மிச்சாங் மழை வெள்ள பாதிப்பு காரணமாக 24-ந்தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால் ஆர்டர் கொடுத்ததுமே 4 நிறுவனங்களிலும் பனியன் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

    முதலில் மாநாடு 17-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் அதற்கு 2 நாள் முன்னதாகவே பனியன்கள் தயாரித்து கொடுத்து விட வேண்டும் என்று தயாரிப்பு பணியில் ஈடுபட்டோம். தற்போது 4 லட்சம் பனியன்களும் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்காக தயாரிக்கப்பட்டுள்ள டீ-சர்ட் பனியனில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளது. பனியனின் இடது, வலதுபுற கைகளில் கலைஞர் நூற்றாண்டு விழா லோகோ அச்சிடப்பட்டுள்ளது. மேலும் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு-2023, மாநில உரிமை மீட்பு முழக்கம் என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளது. மிகவும் தரமாகவும், தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்களை கவரும் வகையில் பனியன்களை தயாரித்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது தயாரிக்கப்பட்டுள்ள டீ-சர்ட் பனியன்கள் மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாநாடு நடைபெறும் 24-ந்தேதி அன்று அந்தந்த மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்கள் டீ-சர்ட் அணிந்து கலந்து கொள்ள உள்ளனர்.

    Next Story
    ×