search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாடு 8 எம்.பி. தொகுதிகளை இழக்கும்- உத்தரபிரதேசத்துக்கு கூடுதலாக 11 தொகுதிகள் கிடைக்கும்
    X

    தமிழ்நாடு 8 எம்.பி. தொகுதிகளை இழக்கும்- உத்தரபிரதேசத்துக்கு கூடுதலாக 11 தொகுதிகள் கிடைக்கும்

    • 2026-ம் ஆண்டுக்குப்பின் பாராளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும்.

    சென்னை:

    மக்கள் தொகை அடிப்படையில் 2026-ம் ஆண்டுக்குப்பின் பாராளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அடுத்த ஆண்டு பாராளு மன்ற தேர்தல் முடிந்ததும், புதிதாக பொறுப்பு ஏற்கும் அரசு இதற்கான நடவடிக்கைகளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அப்போது தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது. உத்தரபிரதேசம் உள்பட வடமாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கார்னேஜ் மையத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தென் மாநிலங்களை விட, வடமாநிலங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. 2026-ம் ஆண்டுக்குப்பின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்பு தொகுதி மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்படும். மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும்.

    அப்போது உத்தரபிரதேசத்துக்கு 11 பாராளுமன்ற தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். தமிழகத்தில் 8 பாராளுமன்ற தொகுதிகள் வரை குறைய வாய்ப்புள்ளது. இதனால் தற்போது இருக்கும் தமிழக எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 31 பாராளுமன்ற தொகுதிகளாக மாறலாம். 42 தொகுதிகள் உள்ள ஆந்திரா, தெலுங்கானாவில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 34 ஆக குறையலாம்.

    இதேபோல் கேரளாவிலும் பாராளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை 20-ல் இருந்து 12ஆக குறையலாம். கர்நாடகாவில் பாராளுமன்ற தொகுதிகள் 28-ல் இருந்து 26 ஆக குறையலாம்.

    தொகுதி மறுவரையறையின் முக்கிய நோக்கமே, ஒவ்வொரு தொகுதியிலும், ஓரளவு சமமான எண்ணிக்கையில் வாக்காளர்கள் இருப்பதை உறுதி செய்வது தான். அப்போதுதான் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் நியாயமான பிரதிநிதித்துவம் இருக்கும்.

    தொகுதி மறுவரையால் உ.பி.க்கு 11 தொகுதிகளும், பீகாருக்கு 10 தொகுதிகளும், ராஜஸ்தானுக்கு 6 தொகுதிகளும், மத்திய பிரதேசத்துக்கு 4 தொகுதிகளும், குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், டெல்லி மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகள் அதிகரிக்கலாம்.

    தொகுதி வாக்காளர்கள் அடிப்படையில் உத்தரபிரதேசத்தில் தற்போது ஒரு எம்.பி. 30 லட்சம் பேரின் பிரதிநிதியாக உள்ளார். ஆனால் தமிழகத்தில் ஒரு எம்.பி. 18 லட்சம் பேரின் பிரதிநிதியாக உள்ளார். தொகுதி மறுவரையறைக்கு மத்திய அரசு கடந்த 1976-ம் ஆண்டு தடைவிதித்தது. இந்த தடை தற்போது 2026-ம் ஆண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    இந்த தடை காரணமாக பாராளுமன்றத்தில் சம நிலையற்ற பிரதிநிதித்துவம் உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் நியாயமான பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×