search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    3 கோவில்களுக்கு சொந்தமான ரூ.11.28 கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு- இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை
    X

    3 கோவில்களுக்கு சொந்தமான ரூ.11.28 கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு- இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை

    • புன்செய் நிலத்தில் 16 தனிநபர்கள் வீடுகள் கட்டியும், நன்செய் நிலத்தினை தனிநபர் ஒருவரும் ஆக்கிரமித்திருந்தனர்.
    • “எச்.ஆர்.சி.இ.” என்ற பெயர் பொறிக்கப்பட்ட எல்லைக் கற்கள் நட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், சித்தாய்மூர், சுவர்ணதாபனேஸ்வரர் சுவாமி கோவிலுக்குச் சொந்தமாக திருத்துறைப்பூண்டி வட்டம், தில்லைவிளாகம் கிராமத்தில் 23.88 ஏக்கர் புன்செய் நிலம் மற்றும் 2.33 ஏக்கர் நன்செய் நிலம் உள்ளன. புன்செய் நிலத்தில் 16 தனிநபர்கள் வீடுகள் கட்டியும், நன்செய் நிலத்தினை தனிநபர் ஒருவரும் ஆக்கிரமித்திருந்தனர்.

    இந்நிலையில் நாகப்பட்டினம் மண்டல இணை ஆணையர் குமரேசன் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட உதவி ஆணையர் ராணி ஆகியோர் முன்னிலையில் வருவாய்துறை அலுவலர்களின் உதவியுடன் இன்று கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு "எச்.ஆர்.சி.இ." என்ற பெயர் பொறிக்கப்பட்ட எல்லைக் கற்கள் நட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. அதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.8.28 கோடியாகும்.

    மேலும், திருப்பூர் மாவட்டம், தாராபுரம், காடு அனுமந்தராயர் சுவாமி கோவிலுக்குச் சொந்தமான 10.98 ஏக்கர் நிலம் மற்றும் அதன் உபகோவிலான கோனாபுரம், லட்சுமி நாராயணசுவாமி கோவிலுக்குச் சொந்தமான 2.14 ஏக்கர் நிலம் தனிநபர் பெயரில் பட்டா பெற்றிருப்பதை அறிந்து திருப்பூர் மாவட்ட வருவாய் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் கோவில்களுக்கு சாதகமாக பட்டா மாற்றம் செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் இன்று திருப்பூர் மண்டல இணை ஆணையரின் அறிவுரையின்படி, திருப்பூர் மாவட்ட உதவி ஆணையர் ஜெயதேவி முன்னிலையில், காவல்துறை மற்றும் வருவாய்துறை உதவியோடு கோவில்களின் நிலம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு ரூ. 3 கோடி ஆகும். ஆக மொத்தம் இன்றைய தினம் மீட்கப்பட்ட 3 கோவில்களுக்குச் சொந்தமான நிலத்தின் மதிப்பு ரூ.11.28 கோடியாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×