search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை: மதுரையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்- டிரோன்கள் பறக்க தடை
    X

    ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை: மதுரையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்- டிரோன்கள் பறக்க தடை

    • மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    • மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் மீனாட்சி அம்மன் கோவிலில் வேலை பார்க்கும் பணியாளர்களின் முழு விவரங்களை சேகரித்துள்ளனர்.

    மதுரை:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு முதன்முறையாக நாளை (18-ந் தேதி) மதியம் 12 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகிறார். அங்கு அவர் அம்மன், சுவாமி சன்னதிகளில் தரிசனம் செய்கிறார். இதனைத் தொடர்ந்து திரவுபதி முர்மு கோவிலின் பல்வேறு பகுதிகளை பார்வையிடுகிறார்.

    கோவிலில் நடைபெறும் அன்ன தானத்திலும் பங்கேற்கிறார். மீனாட்சி அம்மன் கோவிலில் ஜனாதிபதி சுமார் 1 மணி நேரம் வரை இருப்பார் என்று தெரிகிறது. இதனை முன்னிட்டு ஒட்டு மொத்த மதுரை மாநகரமும் போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டு உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஏற்கெனவே சித்திரை வீதிகள் மற்றும் கோவில் சுற்றுப்புற பகுதிகளில் 8 இடங்களில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் மீனாட்சி அம்மன் கோவிலில் வேலை பார்க்கும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அர்ச்சர்கர்களின் விவரங்களை முழு விவரங்களை சேகரித்துள்ளனர். அவர்களின் இருப்பிடம், குடும்ப விவரங்களும் போலீசாரால் குறிப்பு எடுக்கப்பட்டு உள்ளன. அடுத்தபடியாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது.

    ஜனாதிபதி மதுரை வருகையை முன்னிட்டு விமான நிலையம், மீனாட்சி அம்மன் கோவில், வழித்தடங்கள் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள். கோவிலுக்கு வெளியே தற்காலிக கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இருந்தபடி போலீசார் கண்காணித்து வருகின்றனர். சித்திரை வீதியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு தற்காலிக சிறப்பு அறை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் விமான நிலையம் முதல் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு செல்லும் வழித்தடம் அனைத்தும் மாநகர காவல் எல்லைக்குள் உள்ளது. எனவே போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    ஒருவேளை ஜனாதிபதி சுற்றுச்சாலையை பயன்படுத்தும் பட்சத்தில் புறநகர் போலீசாரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று போலீஸ் சரக டி.ஐ.ஜி. பொன்னி, போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த மேலும் ஒரு குழு டெல்லியில் இருந்து மதுரைக்கு வந்துள்ளது. அவர்கள் மீனாட்சி கோயில் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனத்தை முடித்து விட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக கோவில் வளாகத்தில் தற்காலிக வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

    இதற்கிடையே வெடி குண்டு தடுப்பு நிபுணர்கள் விமான நிலையம் முதல் மீனாட்சி-சுந்தரேசுவரா் கோவில் வரை உள்ள சாலைகளில் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். இதன் ஒரு பகுதியாக தெற்குவாசல் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. மதுரையில் இன்று முதல் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையம் முதல் மீனாட்சி அம்மன் கோவில் வரை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்றும், நாளையும் வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. தெற்குவாசல் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வழக்குகள் தொடா்பான பழைய வாகனக் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டு உள்ளன. மேலும் குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு போக்குவரத்து சாலை சீரமைப்புப் பணிகள், வா்ணம் பூசுதல், வேகத் தடைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகிறது.

    இதற்கிடையே மதுரை விமான நிலையத்தில் ஜனாதிபதி வருகையின் போது வேலை பார்க்கும் அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள், ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்பட 40 பேருக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாலை இன்று காலை அதிகாரிகள் மீண்டும் ஆலோசனை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து மதுரையில் இன்று காலை போலீசாரின் பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டது.

    Next Story
    ×