என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாராளுமன்ற தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் யார்-யார்? உத்தேச பட்டியல் விரைவில் தயாராகிறது
- கரூர் தொகுதி தற்போது காங்கிரஸ் வசம் உள்ளது.
- உத்தேச பட்டியலை ஒருங்கிணைப்பு குழு தயார் செய்து முதலமைச்சரிடம் வழங்கும் என தெரிகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து அறிந்து கொள்வதற்காக தொகுதி வாரியாக நிர்வாகிகளை அழைத்து அண்ணா அறிவாலயத்தில் கருத்து கேட்கப்பட்டது. தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்தை கேட்டறிந்தது.கடந்த 28-ந் தேதி தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது.
கரூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், புதுச்சேரி ஆகிய தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கரூர் தொகுதி தற்போது காங்கிரஸ் வசம் உள்ளது. இங்கு ஜோதிமணி எம்.பி.யாக உள்ளார். இவர் மீது தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனர். கடந்த முறை கூட்டணி கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதை சுட்டிக்காட்டினர்.
மேலும், கரூர் தொகுதியில் தி.மு.க. போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினர். இந்த தொகுதியில் தி.மு.க. போட்டியிடும் பட்சத்தில் வெற்றி வாய்ப்பு குறித்தும் நிர்வாகிகள் எடுத்து கூறினர்.
அதேபோன்று காங்கிரஸ் வசம் உள்ள புதுச்சேரி தொகுதியிலும் தி.மு.க. போட்டியிட வேண்டும் என தி.மு.க. நிர்வாகிகள் தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தினர்.
திண்டுக்கல், காஞ்சிபுரம் தொகுதி தி.மு.க. வசம் உள்ளது. இங்கு தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்வோம் என கட்சி நிர்வாகிகள் உறுதி அளித்தனர்.
கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பு குழுவினர் கேட்டுக்கொண்டனர்.
இந்த ஆலோசனை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்டமாக ஒவ்வொரு தொகுதிக்கும் யார்-யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற உத்தேச பட்டியலை இந்த ஒருங்கிணைப்பு குழு தயார் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கும் என தெரிகிறது.
அதன்பிறகு அந்த பட்டியல் பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு இறுதி செய்யப்படும் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.






