search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆஜர்
    X

    என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆஜர்

    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல மாதங்களாக ஆதாரங்கள் மற்றும் வெளிநாட்டு நிதி தொடர்பான பணப்பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் சாட்டை துரைமுருகன், ரஞ்சித்குமார், இசை மதிவாணன், விஷ்ணு பிரதாப், பாலாஜி ஆகியோருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் விசாரணைக்காக ஆஜராகினர்.

    இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலை புலிகள் அமைப்புகளுடன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் ரகசிய தொடர்பு கொண்டு, பல நூறு கோடி நிதி சட்டவிரோதமாக பெற்றதாக கடந்த 2022-ல் ஓமலூர் அருகே வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட 2 பேர் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

    இதில், தமிழீழ விடுதலை புலிகளுக்கு இணையாக மற்றொரு புதிய அமைப்பை நிறுவி தமிழ்நாட்டில் ஆயுத போராட்டத்தை நடத்தவும், இதற்காக வெளிநாடுகளில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்களிடம் இருந்து நிதி உதவி பெற்றதாகவும், இந்த ஆயுத போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பின்னணியில் இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

    அதன் அடிப்படையில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல மாதங்களாக ஆதாரங்கள் மற்றும் வெளிநாட்டு நிதி தொடர்பான பணப்பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோரின் வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பு கொள்கை பரப்பு மாநில செயலாளரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன், கோவை ஆலாந்துறையில் நாம் தமிழர் கட்சி தொழில்நுட்ப பாசறை பிரிவு முன்னாள் நிர்வாகி ரஞ்சித்குமார் (33), நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் இசை மதிவாணன் (40), மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் விஷ்ணு பிரதாப் (25), முன்னாள் நிர்வாகி சென்னை கொளத்தூர் பொறியாளர் பாலாஜி (33) ஆகியோர் நேரடி தொடர்பில் இருந்தது உறுதியானது.

    அதைதொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் திரட்டிய ஆவணங்களின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை சாட்டை துரைமுருகன், ரஞ்சித்குமார், இசை மதிவாணன், விஷ்ணு பிரதாப், பாலாஜி ஆகியோருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்நிலையில் இன்று சாட்டை துரை முருகன், இசை மதிவாணன், முருகன் ஆகியோர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.

    Next Story
    ×