search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமோனியா வாயுவை சுவாசித்த 100-க்கும் மேற்பட்டோருக்கு சளி, காய்ச்சல்- கிராம மக்கள் போராட்டம்
    X

    அமோனியா வாயுவை சுவாசித்த 100-க்கும் மேற்பட்டோருக்கு சளி, காய்ச்சல்- கிராம மக்கள் போராட்டம்

    • உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுமார் 60 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • எண்ணூர் கடல் பகுதியில் மீன்கள், நண்டுகள், இறால்கள் உள்ளிட்ட உயிரினங்கள் சுவாசிக்க முடியாமல் செத்து மிதக்கின்றன.

    சென்னை:

    சென்னை, எண்ணூர் பெரியகுப்பத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழி ற்சாலையில் மூலப்பொருளான அமோனியா திரவம் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள 12,500 டன் கொள்திறன் கொண்ட சேமிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    அம்மோனியா திரவம் அவ்வப்போது வெளிநாடுகளிலிருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு, எண்ணூரில் உள்ள சிறு துறை முகத்திலிருந்து குழாய்கள் மூலமாக திரவ வடிவில் மைனஸ் 33 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் இத்தொழிற்சாலை சேமிப்பு தொட்டியில் சேகரி க்கப்பட்டு, உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொழி ற்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.45 மணியளவில் குழாயில் கசிவு ஏற்பட்டு அமோனியா வாயு பரவியது.

    இதனால் அதனை சுற்றியுள்ள நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம், எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட 10 கிராம மக்கள் பாதிக்கப் பட்டனர். அவர்களுக்கு கண் எரிச்சல், நெஞ்செரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வசித்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். அவர்கள் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பெரும்பாலான மக்கள் அமோனியா வாயுவில் இருந்து தப்பிப்பதற்காக திருவொற்றியூர் டோல்கேட் வரை வந்து அந்த பகுதியில் தஞ்சம் அடைந்தனர். மேலும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுமார் 60 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதையடுத்து உடனடியாக அப்பகுதியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வாயு கசிவை நிறுத்தினார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2 நுரையீரல் நிபுணர்களை கொண்டு 5 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

    தற்போது குழாயில் அம்மோனியா கசிவு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலையின் தரத்தை மதிப்பீடு செய்ய தொழில்நுட்பக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது விரிவான அறிக்கையை 3 நாட்களுக்குள் அரசுக்கு சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    காற்றில் 0.57 பிபிஎம் அம்மோனியா வாயு கலந்திருப்பது அனுமதிக்கப்பட்ட அளவாகும். ஆனால் வாயு கசிவின்போது, தொழிற்சாலை நுழைவு வாயிலில் 28 பிபிஎம் அம்மோனியா வாயு இருந்துள்ளது. இது அனுமதிக்கப்பட்ட அளவை விட 51 சதவீதம் அதிகம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே அமோனியா வாயுவை சுவாசித்தவர்களுக்கு காய்ச்சலும் பரவ தொடங்கியுள்ளது. முதலில் அவர்களுக்கு தொண்டை எரிச்சலுடன் சளி தொற்று காணப்பட்டது. பின்னர் காய்ச்சல் ஏற்பட்டது. அமோனியா வாயுவை சுவாசித்த 100-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    பொதுமக்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுவதால் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தொழிற்சாலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இரவில் பெண்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். சில ஆண்கள் மட்டும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு அங்கேயே அமர்ந்திருந்தனர்.

    இன்று காலையில் மீண்டும் பொதுமக்கள் திரண்டு வந்து 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். உரத் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டு இருந்தாலும், அதை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.

    இதற்கிடையே குழாயில் ஏற்பட்ட கசிவால் அமோனியா கடலில் கலந்தது. இதனால் எண்ணூர் கடல் பகுதியில் மீன்கள், நண்டுகள், இறால்கள் உள்ளிட்ட உயிரினங்கள் சுவாசிக்க முடியாமல் செத்து மிதக்கின்றன. மேலும் கடல் நீர் வெள்ளை நிறமாக மாறியதுடன் ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளன.

    Next Story
    ×