search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பச்சை மிளகாய் விலை புதிய உச்சம்- கிலோ ரூ.100-க்கு விற்பனை
    X

    பச்சை மிளகாய் விலை புதிய உச்சம்- கிலோ ரூ.100-க்கு விற்பனை

    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 100 டன் அளவுக்கு பச்சை மிளகாய் விற்பனைக்கு வருவது வழக்கம்.
    • இஞ்சியின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

    போரூர்:

    கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து பச்சை மிளகாய் விற்பனைக்கு வருகிறது.

    தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் சீசன் முடிந்துவிட்டது. கர்நாடக மாநிலம் ஹாசனில் மட்டுமே தற்போது பச்சை மிளகாய் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பச்சை மிளகாய் வரத்து குறைந்து உள்ளது.

    இதன்காரணமாக கடந்த சில நாட்களாக பச்சை மிளகாய் விலை அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் தற்போது 3 மடங்கு வரை விலை அதிகரித்து உள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

    மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை ஆகிறது.

    வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.150வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பச்சை மிளகாய் மொத்த வியாபாரி ராம்மோகன் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 100டன் அளவுக்கு பச்சை மிளகாய் விற்பனைக்கு வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக அதன் வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது. இன்று 80 டன் பச்சை மிளகாய் விற்பனைக்கு வந்துள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தியாகும் பச்சை மிளகாய் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டு பச்சை மிளகாய் விலை அதிகரித்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் இஞ்சியின் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இன்று அதன் விலை மேலும் எகிறி உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ இஞ்சி ரூ.220-க்கும் மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ இஞ்சி ரூ.250- வரையும் விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் இஞ்சி ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரத்து குறைவால் பச்சை பட்டாணி விலையும் அதிகரித்து உள்ளது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பச்சை பட்டாணி ரூ.200-க்கும், வெளி மார்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பச்சை பட்டாணி ரூ.250 வரையும் விற்கப்படுகிறது.

    கோயம்பேடு சந்தைக்கு ஊட்டி, கொடைக்கானல், டெல்லி மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து பச்சை பட்டாணி விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது டெல்லியில் இருந்து குறைந்த அளவில் மட்டுமே பச்சை பட்டாணி விற்பனைக்கு வருவதால் அதன் விலை அதிகரித்து இருப்பதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×