search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாலையில் விழுந்த ராட்சத பாறை: காரில் சென்ற 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
    X

    சாலையில் விழுந்த ராட்சத பாறை: காரில் சென்ற 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

    • விடிய, விடிய பெய்த மழை காரணமாக அப்பகுதியில் உள்ள 2 வீடுகள் மீது மண்சரிந்து விழுந்ததில் வீடுகள் சேதம் அடைந்தன.
    • பாறைகளும் உருண்டு வருவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    அருவங்காடு:

    குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கே.என்.ஆர் பகுதியில் மரம் சரிந்து சாலையில் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குன்னூர் வனசரகர் ரவீந்திரன் தலைமையிலான குழு அந்த பகுதிக்கு சென்று சென்று சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    பர்லியார் பகுதியில் விடிய, விடிய பெய்த மழை காரணமாக அப்பகுதியில் உள்ள 2 வீடுகள் மீது மண்சரிந்து விழுந்ததில் வீடுகள் சேதம் அடைந்தன.

    இது மட்டுமல்லாமல் தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் மண் சரிவு ஏற்படுவதுடன் மரங்களும் முறிந்து விழுகிறது.

    மேலும் அவ்வப்போது பாறைகளும் உருண்டு வருவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென மலைச்சரிவிலிருந்து பாறை ஒன்று உருண்டு வந்து சாலையில் விழுந்தது.

    அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. கார் வேகமாக சென்று விட்டதால், காரில் இருந்த 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். குன்னூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று கடப்பாரையைக் கொண்டு சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் பாறையை நடுரோட்டில் இருந்து அகற்றினர்.

    இதனிடையே குன்னூர்-கோத்தகிரி சாலையில் எடப்பள்ளி அருகே ராட்சத சாம்பிராணி மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் மரத்தை வெட்டி அகற்றினர்.

    Next Story
    ×