search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு- தேர்தல் கமிஷன் அறிவிப்பு
    X

    ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு- தேர்தல் கமிஷன் அறிவிப்பு

    • தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 5-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண் வாக்காளர்கள்; 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண் வாக்காளர்கள்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 5-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்கள்; 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்கள்; 23 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் இருந்தனர்.

    மேலும் வழக்கம்போல தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்துவது ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. இறந்ததால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    எனவே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் இருந்து இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் வரையில் வரப்பெற்ற விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் இருந்து 145 பெயர்கள் நீக்கப்பட்டன.

    இடைத்தேர்தல் நடப்பதால் அந்தத் தொகுதியில் 7-ந்தேதிவரை (வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள்) வாக்காளர் பெயர்களை சேர்க்க முடியும். அந்த வகையில் 375 ஆண் வாக்காளர்கள், 439 பெண் வாக்காளர்கள், 2 மூன்றாம் பாலினத்தவர் என 816 பெயர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் தற்போதுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியின் துணை வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. அதன்படி அங்கு 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண் வாக்காளர்கள்; 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண் வாக்காளர்கள்; 25 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் இடம்பெற்று உள்ளனர்.

    Next Story
    ×