search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
    X

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    • அ.தி.மு.க. ஆட்சியில்தான் கோவையில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன.
    • தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி இவற்றை முடக்கிய பெருமை திராவிட மாடல் ஆட்சிக்கு சேரும்.

    அவினாசி:

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பற்றி விமர்சித்து பேசிய ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து அவரது தொகுதியான நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

    பொன்மன செம்மல் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்கக்கூட தகுதியற்றவர்கள்தான் தி.மு.க.வினர். அதிலும் குறிப்பாக ஆ.ராசா போன்றவர் எம்.ஜி.ஆரை பற்றி இழிவாக பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. எம்.ஜி.ஆர். பற்றி இழிவாக பேசிய அவருக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

    தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்தது அ.தி.மு.க.தான். இந்த 30 ஆண்டுகால ஆட்சியில்தான் தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளது. பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் கல்வியில் புரட்சி ஏற்படுத்தினார்.

    50 ஆண்டுகால மக்களின் போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில் அத்திகடவு-அவிநாசி திட்டத்திற்கு ரூ. 1512 கோடி மாநில நிதி ஒதுக்கப்பட்டு 90 சதவீதம் முடிந்த நிலையில் 10 சதவீத பணியை முடிக்காமல் 2½ ஆண்டு காலம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. தொடங்கிய திட்டம் என்பதால் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    கடுமையான மின் கட்டண உயர்வால் திருப்பூர்-கோவை மாவட்டத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த குடிநீர் திட்டங்களுக்கு தி.மு.க.வினர் ஸ்டிக்கர் ஒட்டி திறக்கின்றனர். நாளை மறுநாள் 11-ந்தேதி உதயநிதி ஸ்டாலின் குடிநீர் திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. முதியவர்கள் கொலை செய்யப்பட்டு உடல் உறுப்புகளை திருடும் சம்பவங்கள் நடைபெறுகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில்தான் கோவையில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன. தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி இவற்றை முடக்கிய பெருமை திராவிட மாடல் ஆட்சிக்கு சேரும்.

    கோவைக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுத்தது அ.தி.மு.க., பாதுகாப்பில்லாத அரசாக தி.மு.க. அரசு உள்ளது.

    2019, 2021 தேர்தல் அறிக்கையை தி.மு.க. நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. தொடர்ந்து நிர்பந்தம் கொடுத்ததால் மகளிர் உரிமைத் தொகையை வழங்கினார்கள் . அதுவும் தகுதியின் அடிப்படையில் என மூன்றில் ஒரு பங்கு வழங்கினார்கள். இது தி.மு.க.வின் இரட்டை வேடம். திருப்பூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு.

    திருப்பூர் என்றாலே அந்நிய செல்வாணியை ஈட்டி தரும் நகருக்கு நிறைய ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றார். 11 நாட்கள் தங்கியிருந்தார். 3 நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாக செய்தி. ஆனால் அந்த 3 நிறுவனம் தமிழகத்தை சேர்ந்தது. சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் இந்த ஒப்பந்தம் போடவில்லை. வெளிநாடு செல்வதற்காக நாடகம் போட்டு சென்றுள்ளார். தொழில் முதலீட்டை ஈர்க்க போகவில்லை. முதலீடு செய்ய போயுள்ளார்.

    ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு பேச்சு, வந்த பின்னர் ஒரு பேச்சு என திமுக, அரசு இருக்கின்றது. தி.மு.க.வினர் கவர்ச்சிகரமாக பேசுவார்கள். தேர்தலுக்கு பின்னர் வாக்குறுதிகள் கரைந்து விடும்.

    எம்.ஜி.ஆரை பற்றி பேசிய ஆ.ராசாவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். எம்.ஜி.ஆரை பற்றி விமர்சித்தால் இதுதான் தண்டனை என்பதை மக்கள் உணர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்துக்கு சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி., வேலுமணி முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், செ.ம.வேலுச்சாமி, எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், தனபால், வி.பி.கந்தசாமி, கே.ஆர். ஜெயராம், அமுல் கந்தசாமி, தாமோதரன், உடுமலை ராதாகிருஷ்ணன், பல்லடம் எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் அமைப்பு செயலாளர் தாமோதரன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே அவினாசியில் திரண்டு போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தையொட்டி அவினாசியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவினாசியில் இன்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×