search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வங்கியில் போலி நகை அடமானம் வைக்க முயன்ற தே.மு.தி.க. நிர்வாகிகள் 2 பேர் கைது
    X

    கைதானவர்களை படத்தில் காணலாம்.

    வங்கியில் போலி நகை அடமானம் வைக்க முயன்ற தே.மு.தி.க. நிர்வாகிகள் 2 பேர் கைது

    • நகை மதிப்பீட்டாளரிடம் 20 பவுன் நகைகளை கொடுத்து அடமானம் வைக்க வந்ததாக கூறினர்.
    • போலீஸ் ஜீப் வருவதை கண்டதும் பெரியார் நகர் ரமேஷ் தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார்.

    அரியலூர்:

    அரியலூரில், அரியலூர்-திருச்சி சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பிரதான கிளை அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வரவு செலவு கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில் அரியலூர் அண்ணா நகரை சேர்ந்த தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் மணிகண்டன் (வயது 39) மற்றும் அரியலூர் அஸ்வினாபுரம் பகுதியைச் சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகி மணிமாறன் (39), பெரியார் நகரைச் சேர்ந்த ரமேஷ் (35) ஆகிய 3 பேரும் நகை அடமானம் வைக்க இந்த வங்கிக்கு வந்தனர்.

    மணிகண்டனும், மணிமாறனும் வங்கிக்குள் சென்று நகை மதிப்பீ ட்டாளரிடம் 20 பவுன் நகைகளை கொடுத்து அடமானம் வைக்க வந்ததாக கூறினர். ரமேஷ் வங்கிக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.

    இதையடுத்து மதிப்பீ ட்டாளர் அவர்கள் கொடுத்த நகைகளின் உண்மை தன்மையை பரிசோதனைக்கு உட்படுத்தினார். அப்போது அது போலி நகை என்பது தெரிந்து கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மேலாளரிடம் உங்களுக்கு பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் இங்கேயே அமர்ந்திருங்கள் என கூறிவிட்டு அந்த போலி நகைகளுடன் உதவி மேலாளர் செந்தில்குமார் கேபினுக்கு சென்றார். இதை அறிந்து ஆடிபோன செந்தில்குமார் சப்தமில்லாமல் அரியலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு, சப் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்தனர்.

    பின்னர் நகை மதிப்பீட்டாளர் முன்பு அடமானத் தொகைக்காக காத்திருந்த தேமுதிக ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் மணிமாறன் ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையே போலீஸ் ஜீப் வருவதை கண்டதும் பெரியார் நகர் ரமேஷ் தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 20 பவுன் போலி நகைகளை வங்கியில் அடமானம் வைக்க முயன்ற தேமுதிக ஒன்றிய செயலாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×