search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடர்மழையால் நிரம்பும் தருவாயில் அணைகள்: குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு
    X

    தொடர்மழையால் நிரம்பும் தருவாயில் அணைகள்: குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு

    • குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.
    • மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் தொடர் மழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில் நேற்று சாரல் அடித்தது.

    புறநகர் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்தது. அங்கு 22 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதே நேரத்தில் அங்கு விவசாய பணிகள் மும்முரம் அடைந்துள்ளது.

    நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்றும் காலை முதலே ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்கிறது. களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அங்கு 41.60 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாநகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.

    அணைகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு அணை, மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நம்பியாறு அணை பகுதியில் 24 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 93.40 அடியையும், சேர்வலாறு அணை 107.87 அடியையும் எட்டியுள்ளது. அந்த அணைகளுக்கு வினாடிக்கு 1132 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 104 கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 64.20 அடியாக உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி, சிவகிரி ஆகிய இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. அணைகளை பொறுத்த வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்து வருகிறது. குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

    84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையில் நீர் இருப்பு 76 அடியாக உயர்ந்துள்ளது. இன்னும் 8 அடி நீர் உயர்ந்தால் அணை நிரம்பிவிடும். அந்த அணைக்கு வினாடிக்கு 133 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 73.50 அடியாக உள்ளது. அங்கு 216 கனடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.28 அடியாக உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் தொடர் மழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து இருப்பதாலும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு படையெடுத்துள்ளனர். மெயினருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் ஓரமாக நின்று குளித்து மகிழ்ந்தனர்.

    Next Story
    ×