search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை குடிநீர் ஏரிகளில் தொடர் மழையால் ஒரு மாதத்தில் 2 டி.எம்.சி. தண்ணீர் அதிகரிப்பு
    X

    சென்னை குடிநீர் ஏரிகளில் தொடர் மழையால் ஒரு மாதத்தில் 2 டி.எம்.சி. தண்ணீர் அதிகரிப்பு

    • கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
    • புழல் ஏரியில் மொத்த உயரமான 21 அடியில் 16.75 அடிக்கு தண்ணீர் உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11,757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கத்தொடங்கியது. 5 ஏரிகளிலும் மொத்தம் 9,076 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 77 சதவீதம் தண்ணீர் இருப்பு ஆகும்.

    கடந்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரம் நிலவரப்படி குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் சேர்த்து 7 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. ஆனால் தற்போது ஏரிகளில் மொத்த நீர் இருப்பு 9 டி.எம்.சி.ஆக அதிகரித்து உள்ளது. கடந்த மாதத்தில் பெய்த தொடர் மழை காரணமாக ஒரு மாதத்தில் ஏரிகளில் நீர் இருப்பு 2 டி.எம்.சி அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கிருஷ்ணா நீர் மற்றும், மழை நீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மொத்த உயரமான 35 அடியில் 34 அடியை நெருங்கியதால் ஏரியில் இருந்து 2500 கனஅடிவரை உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 1020 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியின் நீர் இருப்பு மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 2761 மி.கனஅடியாக உள்ளது. ஏரியில் இருந்து 1200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதேபோல் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து உள்ளதால் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.

    புழல் ஏரியில் மொத்த உயரமான 21 அடியில் 16.75 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2359 மி.கனஅடிநீர் நிரம்பி இருக்கிறது. ஏரிக்கு 371 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் தண்ணீர் இருப்பு 22 அடியை நெருங்கி உள்ளது. இன்று காலை நிலவரப்படி 21.79 அடி தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3064 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 323 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 418மி.கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 374 கனஅடி தண்ணீர் வருகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 500 மி.கனஅடியில் 474 மி.கன அடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது. ஏரிக்கு 395 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    Next Story
    ×