search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பேனா நினைவுச் சின்னத்துக்கு அனுமதி.. இது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல்.. மீண்டும் கொந்தளித்த சீமான்!
    X

    பேனா நினைவுச் சின்னத்துக்கு அனுமதி.. இது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல்.. மீண்டும் கொந்தளித்த சீமான்!

    • ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும் என நிபந்தனை
    • மக்களின் கருத்தினை அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என சீமான் காட்டம்

    சென்னை:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக சென்னையில் நடுக்கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி அளித்துள்ளது. பேனா சின்னம் அமைப்பதற்கு முன் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும், கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளுக்கு உட்பட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் உள்பட 15 நிபந்தனைகளையும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்துள்ளது.

    பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி வழங்கியதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்குப் புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல். சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுகிறது.

    மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனைக் எடுத்துக் கொள்ளாது அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களின் கருத்தினை ஒன்றிய, மாநில அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மக்கள் விரோத -சூழலியல் விரோத இத்திட்டத்தினை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்க உள்ளது.

    இவ்வாறு சீமான் கூறி உள்ளார்.

    பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக சென்னையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான், பேனா நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்பேன் என்று ஆவேசமாக பேசியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×