search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    முன்ஜாமின் கோரிய ஃபெலிக்ஸ் ஜெரால்ட்- யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த வேண்டுமென நீதிபதி கருத்து
    X

    முன்ஜாமின் கோரிய ஃபெலிக்ஸ் ஜெரால்ட்- யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த வேண்டுமென நீதிபதி கருத்து

    • போலீசார் கடந்த 4-ந்தேதி தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வைத்து சவுக்குசங்கரை கைது செய்தனர்.
    • நேர்காணல் தர வருபவர்கள் அவதூறான கருத்துக்களை கூற, தூண்டும் நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும்.

    தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அவர் மீது கோவையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா என்பவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 4-ந்தேதி தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வைத்து சவுக்குசங்கரை கைது செய்தனர்.

    இதற்கிடையே தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்த போது, அவரது காரில் இருந்து கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாகவும் சவுக்கு சங்கர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் அவரை அன்றைய தினமே கோவை அழைத்து வந்து கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் சவுக்குசங்கரை கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    இந்நிலையில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய தனியார் யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்யக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

    ஆகவே சவுக்கு சங்கர் வழக்கில் தன்னையும் காவல்துறை கைது செய்யக்கூடும் என்பதால் தனக்கு முன்ஜாமின் வழங்கவேண்டும் என்று ஃபெலிக்ஸ் ஜெரால்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரமிது. நேர்காணல் தர வருபவர்கள் அவதூறான கருத்துக்களை கூற, தூண்டும் விதமாக நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும்" என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    மேலும், ஃபெலிக்ஸ் ஜெரால்டு மனு மீது ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

    Next Story
    ×