search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக மீனவர்கள் 21 பேர் கைது: இலங்கை கடற்படை அத்துமீறல்
    X

    தமிழக மீனவர்கள் 21 பேர் கைது: இலங்கை கடற்படை அத்துமீறல்

    • தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்யும் சம்பவங்கள் தொடர்கிறது.
    • நெடுந்தீவு அருகே 21 தமிழக மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    ராமேசுவரம்:

    தமிழகத்தை சேர்ந்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தினமும் 1 லட்சம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் மன்னார் வளைகுடா பகுதியில் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இதற்கிடையே எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து சிறைபிடிப்பதும், அவர்களின் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகுகளை பறிமுதல் செய்து இலங்கை அரசின் நாட்டுடமை ஆக்குவதும் அதிகரித்துள்ளது. இதனால் வாழ்வாதாரம் இழக்கும் மீனவர்கள் மாற்று தொழிலை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    கடந்த 14-ம் தேதி கட லுக்குச் சென்ற நாகை மாவட்டத்தை சேர்ந்த ஒரு விசைப்படகுடன் 15 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் இன்று ராமேசுவரம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது. அது பற்றிய விபரம் வருமாறு:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் பெரும்பாலான படகுகளில் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது 5 ரோந்து கப்பலில் இலங்கை ராணுவத்திற்குச் சொந்தமான குட்டி ரோந்து கப்பல்கள் மின்னல் வேகத்தில் வந்தன. இதைப் பார்த்த மீனவர்கள் அச்சத்துடன் தாங்கள் கடலில் விரித்திருந்த வலைகளை அவசரம் அவசரமாக சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். ஆனாலும் இலங்கை கடற்படையினர் ஆரோக்கிய சுகந்தன் மற்றும் இஸ்ரோல் என்பவரது 2 விசைப்படகுகளை சுற்றிவளைத்து சிறைபிடித்தனர்.

    அந்தப் படகில் இருந்த ஆரோக்கிய சுகந்தன் (38), டிக்சன் (18), சாமுவேல் (19), அந்தோணி, சுப்பிரமணி, பூமிநாதன், ராஜ், சுந்தர பாண்டியன், சீனிப்பாண்டி, பாலு, சந்திவேல், இஸ்ரோல் படகில் இருந்த மீனவர்கள் அந்தோணி லோபாஸ் (34), அடிமை (44), திவாகர் (34), யோஸ்வா (35), அஜித்குமார், பிரவீன் (26), ரெஜீஸ் (35), செந்தில் (44), இருளாண்டி ஆகிய 21 மீனவர்களை கைதுசெய்தனர்.

    இதனைதொடர்ந்து, இன்று காலையில் 2 படகுகள் மற்றும் 21 மீனவர்களை காங்கேசம் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி இலங்கை கடற்பகுதிக்குள் வந்த மீன்பிடித்ததாக கூறி 2 படகுகள் மற்றும் படகில் பிடிக்கப்பட்டிருந்த மீன்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்யக் கூறி, யாழ்ப்பாணத்தில் உள்ள நீரியல்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர். இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில் இந்திய அரசின் பதிவு எண் இல்லை. தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என இலங்கை அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவதை தடுக்க வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×