search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விபத்து
    X
    விபத்து

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

    கடந்த 3 ஆண்டுகளை விட 2021-ம் ஆண்டு விபத்துகள் அதிகரித்துள்ளதோடு உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை போக்குவரத்து குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில் விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    விபத்துகளில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். சாலை ஓர பள்ளங்கள், சாலைகளில் வெளிச்சமின்மை, அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது, தூக்கமின்மை, மது அருந்திவிட்டு ஓட்டுவது, வளைவில் முந்துவது, எச்சரிக்கை பலகை இல்லாதது போன்றவை முக்கிய காரணமாக திகழ்கிறது.

    நடப்பு ஆண்டில் இரு சக்கர வாகன விபத்துக்களில் தான் அதிகளவில் பலியாகி உள்ளனர். சாலைகளில் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டும் இளைஞர்களை போலீசார் கட்டுப்படுத்தாமல் ஓரமாக நின்று வாகன பதிவு எண்களை குறித்துக்கொண்டு அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீசார் வாகன விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்டு கொள்வதில்லை.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2018-ம் ஆண்டு 220 விபத்துக்களில் 244 பேர் உயிரிழந்துள்ளனர். இவை தவிர 788 சிறு விபத்துக்களில் 1325 பேர் காயமடைந்துள்ளனர். 2019-ம் ஆண்டு 189 விபத்துக்களில் 207 பேர் பலியாகினர். தவிர 824 விபத்துக்களில் 1227 பேர் காயமடைந்தனர்.

    2020-ம் ஆண்டில் 206 விபத்துக்களில் 219 பேர் பலியாகினர். 816 விபத்துக்களில் 1113 பேர் காயமடைந்தனர். நடப்பாண்டில் டிச.20ந் தேதி வரை மட்டும் 287 விபத்துக்களில் 303 பேர் பலியாகி உள்ளனர். 784 சிறு விபத்துக்களில் 1019 பேர் காயமடைந்துள்ளனர்.

    கடந்த 3 ஆண்டுகளை விட 2021-ம் ஆண்டு விபத்துகள் அதிகரித்துள்ளதோடு உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையிலும் எண்ணிக்கை அதிகரித்திருப்பது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலரும் இஸ்லாமியா கல்வி நிறுவனத்தின் தலைவருமான எம்.எம்.கே முஹைதீன் இப்ராஹிம் கூறுகையில், பெற்றோர்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிக திறனுடைய இரு சக்கர வாகனங்களை பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்கின்றனர். அவர்கள் வாகனத்தில் ஏறியவுடன் எதிரில் வரும் வாகனங்களை கண்டுகொள்ளாமல் இயக்கி வருகின்றனர்.

    இது குறித்து எங்கள் பள்ளியில் நடைபெறும் பெற்றோர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதில் பெற்றோர்கள் கண்டு கொள்வதில்லை. அதிகமான இளைஞர்கள் விபத்துகளில் சிக்குகின்றனர். இது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி சாலையில் தொடர் விபத்துகள் நடந்து வருவதால் உயிரிழப்புகள் அதிகமாகி வருகின்றது. வெளியூர் பகுதியிலிருந்து இவ்வழியாக செல்லும் டூரிஸ்ட் வாகனங்கள், சரக்கு லாரிகள் அதிக வேகமாக செல்கின்றது. இத்தகைய வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க நவீன தொழில்நுட்ப ஸ்பீடு ரேடார் முறை பொருத்த வேண்டும். இப்பகுதியில் அரசு விழிப்புணர்வு பிரசாரங்களை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    Next Story
    ×