search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பாலியல் தொல்லையால் பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி: கராத்தே மாஸ்டர், தாளாளர் கைது

    தொடர் பாலியல் தொல்லையால் பிளஸ்-2 மாணவி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து கராத்தே மாஸ்டர் மற்றும் நடவடிக்கை எடுக்காத பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவர் கடந்த 22-ந் தேதி தனது வீட்டில் இருந்தபோது, பிளேடால் தனது கையை அறுத்தும், மின்விசிறியில் தூக்குப்போட்டும் தற்கொலைக்கு முயன்றார். பெற்றோர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இருந்தபோதிலும் மாணவி தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து பெற்றோரிடம் சொல்லாமல் இருந்துள்ளார். அவருக்கு பல்வேறு கவுன்சிலிங் அளித்த பின்னரே நேற்று முன்தினம் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து அதிர்ச்சி தகவலை கூறினார்.

    கடந்த 4 ஆண்டுகளாக அவர் படித்து வந்த பள்ளியில் கராத்தே மாஸ்டராக இருக்கும் ஆத்தூர் சீலியம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா (வயது 46) மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    அதாவது, அந்த மாணவி 8-ம் வகுப்பு படிக்கும்போது, அந்த பள்ளியில் கராத்தே மாஸ்டராக வந்த ராஜா அப்போது இருந்தே பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். முதலில் தவறாக அந்த மாணவி கருதாத நிலையில், ராஜாவின் அத்துமீறல் தொடரவே அப்போதே பள்ளி தாளாளர் ஸ்டீபன் தேவராஜிடம் இதுதொடர்பாக புகார் கூறி உள்ளார். ஆனால் அவர் மாணவியின் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. இந்த தகவல் காட்டுத்தீ போன்று அந்த பகுதியில் பரவியதால் சம்பந்தப்பட்ட கராத்தே மாஸ்டர் ராஜாவை ஊர் பொதுமக்களே பிடித்து தர்ம அடி கொடுத்து நேற்று கருமந்துறை போலீசில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து மாணவி கொடுத்த புகாரின்பேரில், அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கராத்தே மாஸ்டர் ராஜா மற்றும் நடவடிக்கை எடுக்காத தாளாளர் ஸ்டீபன் தேவராஜ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×