search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தின்னர் தொழிற்சாலையில் தீ கொழுந்துவிட்டு எரிவதை படத்தில் காணலாம்.
    X
    தின்னர் தொழிற்சாலையில் தீ கொழுந்துவிட்டு எரிவதை படத்தில் காணலாம்.

    மயிலம் அருகே தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

    மயிலம் அருகே தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
    மயிலம்:

    கடலூரை சேர்ந்தவர் மாதவன். இவர் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் பெரும்பாக்கம் கிராமத்தில் தின்னர் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு 30-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று 22 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். 250-க்கும் மேற்பட்ட பேரல்களில் தின்னர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் கடலூர் பாலூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பவர் தின்னரை பேரல்களில் நிரப்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து அங்கிருந்த தின்னர் பேரல்கள் அனைத்திலும் தீ பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது.

    மளமளவென பரவிய தீ தொழிற்சாலை முழுவதும் பற்றி எரிந்தது. இதையடுத்து ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இருப்பினும் சுரேசுக்கு தீக்காயம் ஏற்பட்டது.

    இதற்கிடையே தகவலறிந்த திண்டிவனம், வானூர், விக்கிரவாண்டி, பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடியும் தீ கட்டுக்குள் வரவில்லை. அதோடு தீயணைப்பு வாகனங்களிலும் தண்ணீர் தீர்ந்து போனது.

    இதையடுத்து மாற்று ஏற்பாடாக டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து, தீயணைப்பு வாகனங்களில் நிரப்பினர். பின்னா் சுமார் 2½ மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இருப்பினும் தொழிற்சாலை முழுவதும் எரிந்து சாம்பலானது. அதோடு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு டேங்கர் லாரியும் தீயில் எரிந்து சேதமானது.

    தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த ஒரு டேங்கர் லாரி, தலா 210 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுமார் 300 பேரல்களில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தின்னர், ரசாயன பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×