search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சிக்கிய கார் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
    X
    விபத்தில் சிக்கிய கார் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

    காளையார் கோவில் அருகே கார் கவிழ்ந்து விபத்து- பெண் உள்பட 3 பேர் பலி

    காளையார் கோவில் அருகே கோவிலுக்கு சென்றபோது நடந்த விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தேவகோட்டை:

    மதுரை முல்லை நகரைச் சேர்ந்தவர் ராஜா (வயது 52). தத்தனேரியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மனைவி அல்லிராணி (45), ஆறுமுகம் (65).

    இவர்கள் உள்பட 11 பேர் சிவகங்கை மாவட்டம், திருவெற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் கோவிலுக்கு இன்று காலை காரில் புறப்பட்டனர்.

    8 மணியளவில் சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலை அடுத்துள்ள உழவூரணி மெயின் ரோட்டில் கார் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அங்குள்ள வளைவில் கார் வேகமாக திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. காரில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். உடனே அந்தப்பகுதி மக்கள் காரில் சிக்கியவர்களை மீட்டனர்.

    இந்த விபத்தில் அல்லி ராணி, ஆறுமுகம் ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதில் ஆறுமுகத்தின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி ஆகும்.

    உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜாவை மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக இறந்தார்.

    காரில் பயணம் செய்த மற்ற 8 பேர் காயங்களுடன் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து தொடர்பாக காளையார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவிலுக்கு சென்றபோது நடந்த விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


    Next Story
    ×