என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி தாவரவியல் பூங்காவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்த காட்சி.
    X
    ஊட்டி தாவரவியல் பூங்காவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்த காட்சி.

    ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு கடந்த ஆண்டில் 6 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

    கடந்த ஆண்டு ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 6 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். கொரோனா பாதிப்பால் 7 மாதங்கள் பூங்கா மூடப்பட்டதால் வருகை குறைந்தது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த பூங்காவில் ஆண்டுதோறும் கோடை சீசனை முன்னிட்டு நடத்தப்படும் மலர் கண்காட்சி சர்வதேச அளவில் புகழ் பெற்றது. இங்கு வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் பூங்கா மூடப்பட்டது. பின்னர் தொடர்ந்து 7 மாதங்களாக பூங்கா பூட்டி கிடந்தது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் பூங்கா கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதி திறக்கப்பட்டது.

    முதலில் கொரோனா அச்சம் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக காணப்பட்டது. பின்னர் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பதிவு முறையில் அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இருப்பினும் கடந்த 2019-ம் ஆண்டை ஒப்பிடும் போது 2020-ம் ஆண்டில் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்து உள்ளது.

    கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் மார்ச் 17-ந் தேதி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 4 லட்சத்து 54 ஆயிரத்து 197 பேர், ஊரடங்குக்கு பின்னர் செப்டம்பர் 9-ந் தேதி முதல் நேற்று வரை 1 லட்சத்து 66 ஆயிரத்து 352 பேர் என மொத்தம் 6 லட்சத்து 20 ஆயிரத்து 549 சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு 28 லட்சத்து 11 ஆயிரத்து 255 பேர் வந்து இருக்கின்றனர். அந்த ஆண்டில் கோடை சீசனில் மட்டும் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். தற்போது சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், வருகிற நாட்களில் இன்னும் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×