
ஜப்பான் அரசின் அடிமட்ட மனித பாதுகாப்புக்கு உதவி செய்தல் திட்டங்களின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 13 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரூ.56 லட்சத்தில் 128 கழிப்பறைகள் புதிதாக அமைக்கப்பட்டன.
இதன் திறப்பு நிகழ்ச்சி ஊட்டி ஆர்.கே.புரம் நகராட்சி நடுநிலை பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சென்னையில் உள்ள ஜப்பான் பொது தூதரக தூதர் ஒடஹவா ஹாஜிமி கழிப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். அவருக்கு பள்ளி தலைமை ஆசிரியை பிரமிளா வரவேற்பு அளித்தார். அதன் பின்னர் அவர் பள்ளி ஆசிரியைகளிடம் சுகாதாரம் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து ஜப்பான் தூதர் மற்ற பள்ளிகளில் அமைக்கப்பட்ட கழிப்பறைகளை திறந்து வைத்தார். நீலகிரியில் ஜப்பான் அரசின் நிதி உதவி மூலம் கிராமிய அபிவிருத்தி இயக்கத்தினர் பள்ளிகளில் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி இருக்கின்றனர்.