search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் தற்கொலை
    X
    பெண் தற்கொலை

    பிரியாணிக்கு பதில் கணவர் குஸ்கா வாங்கி கொடுத்ததால் பெண் தற்கொலை

    மாமல்லபுரம் அருகே பிரியாணிக்கு பதில் கணவர் குஸ்கா வாங்கி கொடுத்ததால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள கடம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 32), இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு மணமை கிராமத்தை சேர்ந்த சவுமியா (28) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜயசாரதி (10) என்ற மகனும், சொர்ணா (11) என்ற மகளும் உள்ளனர்.

    மாமல்லபுரத்தை அடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் பூஞ்சேரி என்ற இடத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்த மனோகரன் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் சிற்ப கலைக்கூடத்தில் சிற்பியாக வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் புதிதாக திறக்கப்பட்ட ஒரு பிரியாணி கடையில் ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால், ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் என்று துண்டு பிரசுர விளம்பரத்தை பார்த்த சவுமியா தனக்கு சிக்கன் பிரியாணி வாங்கி தருமாறு தனது கணவரிடம் வற்புறுத்தி உள்ளார். காலதாமதமாக பிரியாணி கடைக்கு சென்ற மனோகரனுக்கு சிக்கன் பிரியாணி கிடைக்கவில்லை. வெறும் குஸ்கா மட்டும் கிடைத்ததால் அதனை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

    தனது மனைவியிடம் தான் வாங்கி வந்த குஸ்காவை சாப்பிடுமாறு வற்புறுத்தி கொடுத்துள்ளார். சிக்கன் பிரியாணிக்கு பதிலாக குஸ்காவை வாங்கி வந்ததால் கோபம் அடைந்த சவுமியா குஸ்காவை தரையில் தூக்கி வீசினாராம். மனோகரன் அதை எடுத்து அந்த வீட்டின் மேல் மாடியில் குடியிருக்கும் ஒரு பெண்ணிடம் சாப்பிடுமாறு கொடுத்து விட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். சிக்கன் பிரியாணிக்கு பதில் குஸ்கா வாங்கி கொடுத்ததால் மனமுடைந்த சவுமியா, தான் குடியிருந்த வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×