search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசைப்படகுகளை சீரமைக்கும் மீனவர்கள் (கோப்புப்படம்)
    X
    விசைப்படகுகளை சீரமைக்கும் மீனவர்கள் (கோப்புப்படம்)

    புதுக்கோட்டையில் விசைப்படகுகள்-வலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரம்

    1-ந்தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் விசைப்படகுகள், வலைகளை சீரமைத்து வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    மீன்வளத்தை பெருக்குவதற்காக ஆண்டுதோறும் கடலில் குறிப்பிட்ட நாட்களில் மீன்பிடி தடை காலம் அமலாகும். அந்த வகையில் கிழக்கு கடற்கரை பகுதியான தமிழகத்தில் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தமிழக அரசு மீனவர்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியது. என்றாலும் கடலுக்குள் செல்ல அனுமதித்தால்தான் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுபற்றி மத்திய அரசிடம் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் மீன்பிடி தடை காலத்தை முன்கூட்டியே முடிக்க கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று மீன்பிடி தடைகாலத்தை மாற்றியமைத்து மத்திய நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் மீன்பிடி தடை காலம் ஜூன் 14-ந் தேதிக்கு பதில் வருகிற 31-ந் தேதியே முடித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது மீன்பிடி தடை கால அளவு 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைந்துள்ளது. இதனால் தமிழகம் உள்பட கிழக்கு கடற்கரை பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஜூன் 1-ந்தேதி முதல் கடலுக்குள் செல்லலாம். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் ஜூன் 1-ந் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என்று உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தயாராகி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய மீன்பிடி தளங்களில் இருந்து சுமார் 650 விசைப்படகுகள் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.

    மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தங்களது விசைப்படகுகளை மீன்பிடி தளங்களில் நிறுத்தியுள்ளனர். ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளங்கள் மூலம் கடலில் மீன் பிடித்து வரும் பெரும்பாலான மீனவர்கள் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள்.

    மீன்பிடி தடையால் அவர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு திரும்பினர். ஏப்ரல் 14-ந்தேதி மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்த நிலையில் அதற்கு முன்னதாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரம் மிக வும் பாதிக்கப்பட்டது.

    மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகுகளை சீரமைப்பது, பெயிண்ட் அடிப்பது உள்ளிட்ட பணிகளை மீனவர்கள் மேற்கொள்வார்கள். ஊரடங்கு காரணமாக வருமானத்தை இழந்துள்ளதால் படகுகளை சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    எப்போதும் மே மாதம் முதல் வாரத்தில் இருந்து சீரமைப்பு பணிகளைத் தொடங்கி விடுவார்கள். ஆனால் இந்தாண்டு மே மாத இறுதியில்தான் சீரமைப்பு பணிகளை தொடங்கினர்.

    தற்போது 1-ந்தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளதால் மீனவர்கள் விசைப்படகுகளை விரைவாக தயார்படுத்தி வருகின்றனர். வலைகளை சீரமைத்து வருகின்றனர். மீனவர்கள் கூறுகையில், தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரணத்தொகையை இந்த ஆண்டு கூடுதலாக வழங்க வேண்டும் என்றனர்.

    விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாததால் தமிழகத்தில் மீன்களின் வரத்து குறைந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த வாரம் முதல் மீன் பிடிக்க செல்ல உள்ளதால் மீன்களின் வரத்து அதிகரித்து விலை குறைய வாய்ப்புள்ளது.

    Next Story
    ×