என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்: ஈரோட்டில் ஜவுளி சந்தை- மாட்டுச்சந்தை மூட உத்தரவு
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு அறிவுறுத்தலின்படி ஈரோடு மாவட்ட எல்லைப் பகுதிகளான தாளவாடி, சத்தியமங்கலம் பகுதியில் உள்ள 4 தியேட்டர்களில் காட்சிகள் வரும் 31-ந்தேதிவரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள மழலையர் தொடக்க பள்ளிகள் என 1000-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வரும் 31-ந்தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா தலங்களான கொடிவேரி அணை, பவானிசாகர் பூங்கா, குண்டேரி அணை போன்ற பகுதிகளில் மறுஉத்தரவு வரும்வரை சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள பார் வசதிகளுடன் கூடிய டாஸ்மாக் கடைகள் மறுஉத்தரவு வரும்வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி 105 பார்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜவுளி சந்தை திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை நடைபெறும். இது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் நடைபெறும் சந்தையில் 3 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சந்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 360 தினசரி கடைகள், 60 வாரச்சந்தை கடைகள் என 420 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
நாளை கருங்கல் பாளையத்தில் நடைபெற உள்ள மாட்டுச்சந்தைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 3 கோடி வர்த்தகம் முடங்கி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களிலும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் ஈரோடு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.






