என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாண்டராஜன் குப்பத்தில் திரண்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    X
    வாண்டராஜன் குப்பத்தில் திரண்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    குமளங்குளத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்க கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு

    கடலூர் அருகே குமளங்குளத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்க கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    நெல்லிக்குப்பம்:

    கடலூர் ஒன்றியம் குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை பெரியார் அரசு கல்லூரியில் கடந்த 2-ந் தேதி நடைபெற்றது. இதில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் முதலில் அறிவித்தனர்.

    மறுநாள் காலையில் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் விஜயலட்சுமிக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அதிகாரிகள் வழங்கினர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலட்சுமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜெயலட்சுமியின் ஆதரவாளர்கள் மற்றும் கிராம மக்கள் நேற்று குமளங்குளத்தில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற ஜெயலட்சுமிக்கு சான்றிதழ் வழங்காமல், பெயர் குளறுபடியால் விஜயலட்சுமிக்கு வழங்கப்பட்ட வெற்றி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். இந்த குளறுபடிக்கு காரணமான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான பதவியேற்பு விழாவை ரத்து செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

    இதேபோல் குமளங்குளம் ஊராட்சிக்குட்பட்ட ராணிப்பேட்டை, சூரியன் பேட்டை, மூலக்குப்பம், நரியன்குப்பம், வாண்ட ராஜன் குப்பம், வன்னியர்புரம் அணைக்கட்டு புதுப்பாளையம் ஆகிய கிராமங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

    இதற்கிடையே குமளங்குளம் ஊராட்சிமன்ற தலைவராக விஜயலட்சுமி பதவிஏற்கும் விழா, வாண்டராஜன்குப்பம் பகுதியில் உள்ள கிராம சேவை மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இன்று காலை 10 மணிக்கு அவர் பதவிஏற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மேற்பார்வையில் ஏராளமான போலீசார் கிராமசேவை மையத்தின் முன்பு குவிக்கப்பட்டிருந்தனர்.

    அப்போது ஜெயலட்சுமியின் ஆதரவாளர்கள் 100 பெண்கள் உள்பட 500 பேர் திரண்டு வந்து பதவி ஏற்பு விழா நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அங்கிருந்த போலீசார் இது அரசு நடத்தும் விழா இதனை தடுக்க கூடாது. எனவே இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று கூறினர்.

    ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். தேர்தலில் ஜெயலட்சுமி தான் அதிக ஓட்டுகள் பெற்றுள்ளார். அதிகாரிகள் குளறுபடியால் விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.

    விஜயலட்சுமியை ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்பதை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எங்களது வாக்காளர் அடையாள அட்டை, ரே‌ஷன் கார்டு மற்றும் அரசு ஆவணங்கள் அனைத்தையும் உங்களிடம் ஒப்படைத்து விடுவோம் என்றனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    விஜயலட்சுமி ஊராட்சிமன்ற தலைவராக பதவிஏற்பதற்கு பெண்கள் மற்றும் கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஜெயலட்சுமியின் தரப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×