என் மலர்
நீங்கள் தேடியது "panchayat leader"
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே சென்னிகுளத்தை சேர்ந்தவர் சிவஞானம். இவரது மனைவி ஞானவள்ளி. சிவஞானம் கோவில்பட்டி அருகே பஞ்சாயத்து ஊழியராக பணி செய்து வருகிறார். இவருக்கும் சிவகிரியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான கருத்தப்பாண்டி (39) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தின் அடிப்படையில் சில நேரங்களில் கருத்தப்பாண்டி சென்னிகுளத்திற்கு வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஞானவள்ளி வீட்டில் குழந்தைகளை விட்டு விட்டு கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவின் லாக்கரை மர்ம நபர் உடைத்து உள்ளே இருந்த 11 பவுன் நகைகளை திருடி சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். குழந்தைகள் சிறியவர்கள் என்பதால் வந்த நபர் யார் என்று தெரியவில்லை.
இது பற்றி கரிவலம்வந்தநல்லூர் போலீசில் ஞானவள்ளி புகார் செய்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சித்ரகலா தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள செல்போன் டவர் மூலம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சம்பவ இடத்திற்கு கருத்தப்பாண்டி வந்து சென்றது தெரியவந்தது.
இந்நிலையில் கரிவலம்வந்தநல்லூர் அருகே இன்ஸ்பெக்டர் சித்ரகலா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த கருத்தப்பாண்டியை கண்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஞானவள்ளியின் வீட்டில் புகுந்து 11 பவுன் நகையை திருடியதை கருத்தப்பாண்டி ஒப்புக்கொண்டார்.
மேலும் திருடிய நகையை விற்று செலவு செய்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கருத்தப்பாண்டி மேலும் இது மாதிரியான திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.






