search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவியை கொன்ற கணவர்
    X
    மனைவியை கொன்ற கணவர்

    மனைவியை கழுத்தை நெரித்துக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

    மனைவியை கழுத்தை நெரித்துக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜமால்கான் குட்டகாரத்தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மகன் பாபு (வயது 33). டிப்ளமோ படித்துள்ளார். விருத்தாசலம் பெண்ணாடம் ரோடு தெற்கு தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தர்மலிங்கம் மகள் கலைவாணி (28). பட்டதாரி. இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது.

    இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் 2 பேரும் கடந்த 26.11.2015 அன்று திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமாகி 5 மாதங்கள் ஆன பிறகு, பாபு வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே கலைவாணி கர்ப்பமடைந்தார். இதனால் அவருக்கு 5 மாத சடங்கு நடத்தப்பட்டு, அவர் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    ஆனால் மறுபடியும் அவர் பாபு வீட்டுக்கு வரவில்லை. இதனால் பாபு, கலைவாணி வீட்டுக்கு சென்று அவரை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். இருப்பினும் அவர் வர மறுத்துவிட்டார். இதையடுத்து பாபு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் கலைவாணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 11 மாதங்கள் ஆன பிறகு பாபு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார்.

    பின்னர் ஊர் முக்கியஸ்தர்களுடன் கலைவாணி வீட்டுக்கு சென்று, அவரை சமாதானம் செய்து தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். தொடர்ந்து தனது வீட்டு மாடியில் கலைவாணியுடன் பாபு தனி குடித்தனம் நடத்தினார். இதற்கிடையே கடந்த 4.12.2016 அன்று தனது குழந்தைக்கு முதலாவது பிறந்தநாளை காலையில் கலைவாணியின் தாய் வீட்டிலும், மாலையில் பாபு வீட்டிலும் கொண்டாடினர். இருப்பினும் கலைவாணி பாபுவுடன் குடும்பம் நடத்தாமல் தனது தாய் வீட்டுக்கும், அவரது அக்காள் வீட்டுக்கும் அடிக்கடி சென்று வந்தார்.

    இது தொடர்பாக கடந்த 5.12.2016 அன்று மாலை 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாபு, கலைவாணியை கழுத்தில் தாக்கினார். இதனால் மயங்கி விழுந்த அவரை கழுத்தை நெரித்துக்கொலை செய்தார். இது பற்றி கலைவாணியின் தந்தை தர்மலிங்கம் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி (பொறுப்பு) மகாலட்சுமி தீர்ப்பு வழங்கினார்.

    அதில், இவ்வழக்கில் பாபு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வப்பிரியா ஆஜராகி வாதாடினார்.
    Next Story
    ×