என் மலர்
செய்திகள்

விபத்து
மயிலாடுதுறை அருகே விபத்து: 2 வாலிபர்கள் பலி
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள மல்லியம் குச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 25) கூலித் தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறையில் இருந்து மல்லியத்துக்கு சென்று கொண்டிருந்தார். இதேபோல் மயிலாடுதுறையில் இருந்து மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்த கார்த்திக் (28) என்பவர் வந்து கொண்டிருந்தார்.
அப்போது சித்தர்காடு என்ற இடத்தில் வந்த போது இரு மோட்டார் சைக்கிள்களும் திடீரென எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் ரமேஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய கார்த்திக்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான ரமேஷ், கார்த்திக் ஆகிய இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை.
Next Story






